பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

127






ஏப்ரல் 20


நெஞ்சமெனும் சிற்றம்பலத்தில் நீ நின்று ஆடவேண்டும்!


இறைவா, இடுகாட்டெரியாடல் அமர்ந்தருள் இறைவா, நீ மகிழ்ந்தாடும் இடம் சுடுகாடு. எந்தச் சுடுகாடு? ஊழிப் பெருங்காலத்தில் இந்த உலகம் முழுவதும் பற்றி எரியும் சுடுகாடு. யான்', 'எனது' என்று மயங்கிப் போராடிய தேவர்களும் மனிதர்களும் அழியும் சுடுகாடு, தனி ஒருவனாக நீ நின்றாடும் நிலை இது.

இறைவா, நீ ஏன் என் மனத்தில்-நெஞ்சகத்தில் நின்றாடக் கூடாது? இறைவா, என் நெஞ்சில் நின்றாட விருப்பந்தானா? ஆனால் என் நெஞ்சு சுடுகாடு ஆகவேண்டுமே. இறைவா, என் நெஞ்சத்தை, நீ உவந்தாடும் சிற்றம்பலமாக்க அருள்செய்க!

விருப்பு, வெறுப்புகளைச் சுட்டுப் பொசுக்கும் தூய துறவுள்ளத்தினை அருள் செய்க! வேண்டுதல், வேண்டாமை என்ற நிலைகளைச் சுட்டெரிக்கத் திருவுள்ளம் பற்றுக, ஆணவம், வறுத்த வித்தென அடங்கிக்கிடக்க அருள்செய்க! என் நெஞ்சம் எனும் காட்டை வெட்டித் திருத்தி நிலமாக்கி வைத்துப் பின் நீ நின்றாடுவாய்.

என் நெஞ்சத்தைச் சிற்றம்பலமாக்குவதே என் வாழ்க்கையின் குறிக்கோள் என் நெஞ்சத்தில் நீ நின்றாடுதல் வேண்டும். நானும் மகிழ்ந்து ஆடவேண்டும். என்புருகிப் பாட வேண்டும். என் தலையினை நின் திருவடிகளுக்கு அணியாக் கிடுதல் வேண்டும். நின் திருவடிகளை என் புன்தலைக்கு அணியாகச் சூடிக்கொள்ளுதல் வேண்டும். இறைவா, அருள் செய்க! இந்த வண்ணம் அருள் செய்க!