பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 21


தென்னையைப் போல் வாழ்வேன், என்னை நீ ஏற்றுக்கொள்.


இறைவா, இயற்கையின் அற்புதங்களைப் பார்த்துப் பார்த்துப் படித்துக் கொண்டால் போதுமே, அழகுற வாழலாமே. இறைவா, தென்னை மரத்தின் வேரில் தண்ணீர் ஊற்றினால் தலையால் தருகிறது இளநீராக. ஆம், இறைவா, மனிதனின் கால்கள் நடக்கின்றன. மனித சமூகத்தின் நடப்பே வரலாறு. இந்த வரலாற்று நிகழ்வுகளை மூளையின் செயற்பாட்டால் பயனுடையதாக்கிக் கொள்வதுதானே வாழ்க்கை.

இறைவா, தென்னை எவ்வளவு விழிப்புணர்வுடன் தூய்மையைப் பயன்படு பொருளைப் பாதுகாத்துக் கொள்கிறது. மட்டை, நார், கொட்டாங்கச்சி என்றெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்து தேங்காயின் கருப்பொருளைக் காத்து நிற்கின்றன. இறைவா, அதுபோல நான் என் உயிரை, இல்லை உயிருக்கு உயிராக விளங்கும் உன்னைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டாமா? இறைவா, முக்குணங்கள் வசப்பட்டு நின்னை இழக்க மாட்டேன்.

இறைவா நின்னுடன் எனக்குஉள்ள உறவு தூய்மையானது. உண்மையானது. ஊக்கம் அளிப்பது. அதை எப்போதும் பாதுகாப்பேன். என் உயிரை மடமையிலிருந்து - உறவு, பாசங்களிலிருந்து ஆணவத் திண்மையிலிருந்து மீட்டு உனக்கு அர்ப்பணிக்கின்றேன். இறைவா, என்னை ஏற்றுக் கொள்.