பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

131






ஏப்ரல் 24


நின் அறக்கொடையை நினைந்து வாழ அருள் செய்க!


இறைவா, நாய் கீழான பிராணியா? மேலான பிராணியா? நன்றியுள்ள பிராணி நாய். ஆனால், இறைவா, நாய்க்குரிய நன்றிக் குணம் பொதுமையான குணமல்ல. தன் இனத்தினிடத்தில் நன்றியாக இருப்பதில்லையே?

இறைவா, ஒரு நாய் தன்னை ஈன்று வளர்த்த தாய் நாயினிடத்தில் கூட, பற்றுடன் இருப்பதில்லை. அது மட்டுமல்ல; சண்டைபோட்டுக் கொள்கிறது. ஆயினும் என்னை விட நாய் உயர்ந்தது என்பதை உணர்கிறேன். நாய் தன்னை வளர்த்தவர்களிடத்தில் நிறைவான நன்றி காட்டுகிறது.

இறைவா, நீ எனக்குச் செய்த உதவி இவ்வளவா, அவ்வளவா? ஆயினும் என்ன? இருட்டில் ஒரு மூலையில் கிடந்த என்னை முற்றத்திற்குக் கொண்டு வந்தாய். நுகர்ந்து இன்புற்று மகிழப் பொறிகளையும் புலன்களையும் தந்தாய். எனது பொறிகளும் புலன்களும் நுகர்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட எத்தனை கோடி இன்பங்கள் வைத்துள்ளாய் இறைவா.

நீ எனக்குச் செய்துள்ள நன்மையை அறிந்தேன் இல்லை. நன்றியுடன் நினைந்து போற்றினேன் இல்லை. இறைவா, என்னை மன்னித்துவிடு. என் மனத்தில் நின் அறக்கொடையை நினைந்து நினைந்து போற்றி வாழ்ந்திட அருள் செய்க.