பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




ஏப்ரல் 27


இறைவா, மயக்கம் தவிர்த்து ஆட்கொள்!


இறைவா, நான் யார்? இறைவா, நீ என்னைப் படைத்தாயா? இறைவா, நிச்சயம் நீ என்னைப் படைத்திருக்க மாட்டாய். ஆம், இறைவா, நீ குறைவிலா நிறைவு. கோதிலா அமுது. ஞானத்தின் திருவுரு. நீ என்னைப் படைத்திருந்தால் இவ்வளவு குற்றங்கள், குறைகளுடன் படைத்திருப்பாயா? அதனால் நீ என்னைப் படைத்திருக்கமுடியாது.

இறைவா, என் பெற்றோரே என்னைப் படைத்தார்களா? அதுவும் இல்லை இறைவா. என் பெற்றோரும் தன் குழந்தை உடல்-உள்ளம் ஊனமுடையதாகப் படைக்க விரும்பியிரார். ஆதலால் நான் என் பெற்றோர்களின் படைப்பும் அல்ல. என் பெற்றோர் என் பயணத்திற்குத் துணை நிற்பவர்களே தவிர, படைப்பாளர்கள் அல்லர்.

இறைவா, குழாயில் தண்ணீர் வருகிறது. குழாய், தண்ணீரைப் படைக்கவில்லை. அஞ்சற்காரர் அஞ்சலைக் கொண்டு வந்து தருகிறார். ஆனால் அந்த அஞ்சலை எழுதியவர் அஞ்சற்காரர் அல்லர் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இறைவா, என் இயல்பும் குற்றங்குறையுடையதாக இருப்பதால் நான் படைக்கப்படவும் இல்லை. என்னுடன் உள்ள ஆணவக்கூட்டு இருக்கிறதே, அதுதான் என்னைச் சிறுமைப்படுத்துகிற குற்றம், குறைகளைத் தருகின்றன. ஆணவத்திற்கு நான் அடிமைப்பட்டுள்ளேன்.

இறைவா, என் ஆணவச் சேட்டையை அடக்க எனக்கு ஞானத்தைக் கொடு! மயக்கங்களைத் தவிர்த்து ஆட்கொள் இறைவா! இறைவா, ஆணவத்திலிருந்து நீ, என்னை மீட்டு விட்டால் நான் உனக்கு ஏழேழ் பிறப்பும் தொழும்பாய்க் கிடந்து அடிமை செய்வேன். இறைவா, அருள் பாலித்திடுக!