பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

139




மே 2


எடுத்த முடிவுகளைத் துணிவுடன் செயற்படுத்தும்
இயல்பினைத் தா!


இறைவா, இராவணனின் தலைகள் பத்தும் நசுங்கக் கால்விரல் ஊன்றிய வலியோனே! எனக்கும் வலிமை தேவை. உடல் வலிமையல்ல. அதுவும் தேவைதான். உள்ளத்தில் வலிமையில்லாது பெறும் உடல் வலிமை பயனற்றது. எனது உள்ளத்தில் வலிமை தேவை.

இறைவா, நான் ஒரு கிழட்டுக் குதிரை போலானேன். கிழட்டுக் குதிரை இலாயத்தில் படுத்தே கிடக்கும். தீனி தின்னும்! எப்பொழுதோ ஒரு தடவைதான் சவாரிக்குப் பயன்படும். இறைவா, நான் எத்தனையோ நல்ல தீர்மானங்களை எடுக்கிறேன்! அழகாக எழுதி வைக்கிறேன். என்ன பயன். தீர்மானங்கள் என் வாழ்க்கையில் செயற்பாட்டுக்கு வரவில்லையே! நூற்றில் ஒரு தீர்மானம் கூட செயற் பாட்டுக்கு வருவதில்லை.

இறைவா, என் தீர்மானத்தைச் செயலுக்குக் கொண்டு வரக் கூடியவாறு என் வாழ்க்கையைப் பழக்குதல் வேண்டும். பழக்கம், வழக்கம் என்பதில் வழுக்கி வழுக்கி வீழ்ந்து கிடக்கிறேன். எழுந்து நடமாட இயலவில்லை! நான் எடுத்த தீர்மானங்கள் என் காலத்தில் கூட செயற்பாட்டுக்கு வராது போனால் வாழ்ந்து என்ன பயன்?

நல்ல தீர்மானங்களாக இருந்தால் மட்டும் போதாது. எடுத்த முடிவுகளைத் துணிவுடன் செயற்படுத்தும் இயல்பினைத் தா! நான் ஒரு இளமை நலமிக்கவனாகவே எப்போதும் பயன்படக்கூடியவனாகவே வாழ ஆசைப்படுகிறேன். இறைவா அருள் செய்க!