பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




மே 3


என் இதயம் உன்னோடு பேச ஆணை தந்து அருள் செய்க!


இறைவா, நானும் உன்னை அருச்சிக்க ஆசைப்படுகிறேன். இறைவா, எழுந்தருள்க! என் அருச்சனையை ஏற்றுக் கொள்க. ஆம் இறைவா, உனக்கு நான் இலட்சார்ச்சனை செய்கிறேன்! கோடி அருச்சனை செய்கிறேன்! ஆனால், நீ அருளிச் செய்யவில்லை!

ஏன் இறைவா, நீ விரும்பும் மலர் எது? தாமரையும் அல்ல; மல்லிகையும் அல்ல; முல்லையும் அல்ல! இறைவா, நீ விரும்புவது இந்த மலர்களையா? இதய மலரையே நீ விரும்புகிறாய்! என் இதயம் மலராக இல்லை. கல்லைப் பிசைந்து கனியாக்கும் வல்லாளன் நீ! நின் அருட் பார்வையால் என் இதயம் மலர்க!

கதிரவன் கண்ட தாமரைபோல என் இதயம் நின் அருள் நோக்கால் மலர்க! இறைவா, என் இதயம் அன்பில் தோய்ந்து அருள் நலத்தினைப் பெற்று விளங்குக! இதயம் விரிவடைந்திடுக! உலகந்தழுவியதாக வளர்க! பேரிதயமாக மலர்க!

நீ எழுந்தருளும் திருக்கோயிலாக என்னிதயம் விளங்குக! இமைப்பொழுதும் என் இதயத்தினின்றும் நீங்காதிருந்து அருள் செய்க! என் இதயம் பாய்ச்சும் செங்குருதி திருவருள் நலம் செறிந்ததாக விளங்க அருள் செய்க! என் இதயம் உன்னோடு பேச ஆணை தந்து அருள் செய்க!