பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை 141



மே 4


நீதியே என் ஆவியென விளங்கிட அருள் செய்க!


இறைவா, நீதியே! இன்று நான் வாழும் உலகில் எதுவுமே இல்லை; நீதியில்லை; நியாயம் இல்லை; அன்பு இல்லை; பரிவு இல்லை; பாசம் இல்லை. எல்லாம் பணத்தின் மயம் !

அன்பு, அறம், ஒப்புரவு, கண்ணோட்டம் எல்லாமே கடைச்சரக்காகிவிட்டன. இறைவா, ஆனாலும் நீதியின் பாவனைக்கும் பஞ்சம் இல்லை. நீதி பற்றிய கற்பனை அருமையாக இருக்கிறது. இறைவா, உலகம் முழுவதும் நடிப்பில் நடக்கிறது! பணத்தில் இயங்குகிறது! இறைவா, என்னாக் காப்பாற்று!

"நீதி" கற்பனையல்ல. நீதி என்பது ஒரு வாய்மை என்பதனை அறிந்து ஒழுக அருள் செய்க! நீதி பாவனை போதாது. நானே நீதியின் பாலகனாக மாற வேண்டும். இறைவா, அருள் செய்க!

நீதியே என் வாழ்க்கையின் உயிர்ப்பாக விளங்க அருள் செய்க! "நீதி" வழி வரும் நிதியே எனக்குக் கிடைக்க அருள் செய்க! நீதி என் உயிரின் உயிராக இருக்க அருள் செய்க! நீதி நிலை நிற்கத் துணை செய்யும் நியதிகள் வழி வாழ்ந்திட அருள் செய்க! நீதியே உலகத்தின் உயிர்ப்பு! இறைவா, நீதியே என் ஆவியென விளங்கிட அருள் செய்க!