பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142 தவத்திரு குன்றக்குடி அடிகளார்




மே 5


நல்லுறவாகி நலமெலாம் அருள்க!


இறைவா, ஒரு குலமும் ஓருரும் சுற்றமுமாக எழுந்தருளி உய்வித்திடும் தலைவனே! உறவு முறைகள் பலமான சொற்களால் அமைந்துள்ளன. ஆனால், நடைமுறை என்ன? இறைவா, எனக்குச் சுற்றமே இல்லை! என்னைச் சுற்றி ஒரே பொய்ம்மையான உலகம்! உறவுகளையெல்லாம் சொத்துடைமை என்ற நஞ்சு பாழடித்து விட்டது!

தொடர்ந்து வாராச் சொத்தின் பேரால் மனித உறவுகள் பாழ்பட்டுப் போகின்றன! இறைவா, எனக்குச் சோறும் கூறையும் போதும். ஆனால், அன்பினாலாய உறவினர் எண்ணிக்கை உயர அருள் செய்க! பலரோடு கூடிக் கலந்து காகம் போல் உறவு கலந்து உண்டு பழகிட நயந்தருள் செய்க! சுற்றமாய் எதற்கும் என்னைச் சூழ்ந்து நிற்க அருள் செய்க!

நீயே ஒரு குலமும் சுற்றமுமாக வந்தருள் செய்க! தாயாகி என்னை வளர்த்திடுக! தந்தையாகி நின்று என்னைச் சான்றோனாக்கிடுக! ஐயனாகி நின்று அருள் செய்க! அன்புடைய மாமனாக வந்து தாழாது வழங்கியருள்க! நல்ல மாமியுமாகி, மகிழ்ச்சி பொங்கிடும் வாழ்வினை அளித்திடுக! உடைமைகள் காரணமாகப் பகைமை வாராது காத்திடுக! பொது அறத்தோடு நிற்க அருள் செய்க! மன்றுளார் அடியார் எம் தோழராக நின்று உற்றுழி உதவிட அருள் செய்க! நல்லுறவுகளே என்னை வளர்ப்பன! இறைவா, அருள் செய்க!