பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மே 7


திருநெறிய தமிழ்ப்புனல் பாய்ந்து சென்று என் இதயத்தில் தங்கும்படி அருள் செய்க!


இறைவா, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தகுடி, தமிழ்க்குடி நீயும் அப்பொழுதே என் பொருட்டு, கல்லில் எழுந்தருளினை! இறைவா! நானோ உன்னைத் தொழாமல் கல்லைத் தொழுதேன். உன்னைப் பாவிக்காமல் கல்லைப் பாவித்தேன்! அதனால் என் நெஞ்சு கல்லாகிவிட்டது!

இறைவா, கல்லைப் பிசைந்து மென் கனியாக்கும் வல்லாளனே! என் நெஞ்சை நெகிழச் செய்திடுக! என் நெஞ்சினை உருக்கி நெகிழச் செய்யும் தமிழ், வழிபாட்டில் இல்லையே! அஷ்டோத்திரம் அல்லவா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது! நான் என்ன செய்ய?

என் செவிவழித் திருநெறிய தமிழ்ப்புனல் பாய்ந்து சென்று இதயத்தில் தங்கும்படி அருள் செய்க! என் இதயத்தில் அன்பு எனும் உரம் இடுக! தகைமை எனும் வேலி அமைத்திடுக! தற்சார்பெனும் களைபறித்திடுக! அகந்தை எனும் நோய் வராமல் பாதுகாத்திடுக! சிவம் எனும் வித்தினை இடுக! இன்ப அன்பு என்ற பயிர் தானே விளையும் இறைவா, அருள் செய்க! இன்னே அருள் செய்க! என் இதயம் சிவம் தாங்கி வளர்க! என் பொறிகள் சிவத் தன்மையுடையனவாய் விளங்க அருள் செய்க!