பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148 தவத்திரு குன்றக்குடி அடிகளார்





மே 11


இமைப் பொழுதும் போற்றற்குரியதென அறிவித்த இறைவா போற்றி!


இறைவா, தினைப் போதில் தேசமெல்லாம் உய்த்தறியும் தலைவா, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காத இறைவா, போற்றி! போற்றி!! 'இமைப் பொழுதும்!' என்பதே கால அளவையின் குறைந்த குறியீட்டு அளவு. என் வாழ்நாள் ஒவ்வொரு இமைப் பொழுதாகத்தான் நகர்கிறது.

பல நூறாயிரம் இமைப் பொழுதுகளையும் நான் வறிதே பயன்படுத்தாமல் பொழுதைப் புறக்கணித்து விட்டு எய்த்து அலைகின்றேன். என் வாழ்க்கையில் ஒவ்வொரு இமைப்பொழுதும் பொருளுடையதாக உருமாற்றம் பெற்றால் என் வாழ்வு ஆக்கத்தில் சிறக்கும்.

நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் "இமைப் பொழுதுகள்" உரிய இடத்தை வகிக்கின்றன. எந்தத் தவறும் சரி. நன்மையும் சரி, ஏதோ ஒரு இமைப் பொழுதில்தான் கருவுற்று வளர்கிறது. இறைவா, என் இமைப்பொழுதுதான் என் வாழ் நாள்! இமைப்பொழுதுகள் தாம் பணிகளின் தொடக்கத்திற்குரியன. செயற்பாட்டுக்குரியன.

இமைப்பொழுது, ஆம்! அது என் வாழ்நாளின் ஒரு பகுதி என்று போற்றிப் பயன் கொள்ளும் திறனை அருள் செய்க! என் வாழ்வில் இமைப் பொழுதும் போற்றுதலுக்குரியதே என்று அறிவித்தருள்க! கருணையே போற்றி! போற்றி!!