திருவருட்சிந்தனை
153
இறைவா, ஒரு காலத்தில் நீ வலைவீசினாய் என்ற வரலாறு கேட்டிருக்கிறேன். ஆனால் இறைவா, நீ வலை வீசியபோது வலையில் என்ன அகப்பட்டதோ அது எனக்குத் தெரியாது. ஆனால், என்னைப் பொறுத்த வரையில் நான், நீ விரித்து வீசும் வலையில் இதுவரை சிக்கவில்லை.
இறைவா, நான் மட்டுமா? என்னைப் போல் கோடானுகோடி. பஸ்மாசுரன், சூரபதுமன் இவர்கள் எல்லாம் நின் வலையில் விழாதவர்கள். ஒரு போராட்டத்திற்குப்பின் நின் வலிமையினாலும் யுக்தியினாலும்தான் அடக்கினாய்.
இறைவா, நானோ நின் வலையில் சிக்காத சின்ன மீன், தப்பி ஓடிவிடும் தன்மையுடையவன்.
இறைவா, நான் என்ன செய்ய! என்னோடு பிறந்த ஆணவம் என்னை ஆட்டிப் படைக்கிறது. அதற்குச் சேவகம் செய்யவே பொழுது இல்லை.
இறைவா, ஆணவத்தினைப் போக்க நான் பிடித்த மாயை-கன்மம் ஆகியவை துணையாக இல்லாமல் எசமானர்களாகி என்னுடைய கூட்டாளிகளாகிய ஐம்பொறிகளை அவை அடகு பிடித்து விட்டன! நான் இப்போது எட்டுப் பேருக்கு அடிமை! இறைவா, என்னைக் காப்பாற்று!
என்னை வலை வீசிப் பிடிக்க முடியாது! தூண்டில் போடு! தூண்டில் நுனியில் உள்ள இரையின் மீது ஆசைப்பட்டு வருவேன்! ஆட்படுத்திக் கொள்! ஆண்டு கொள்!
பொன்னையும் பொருளையும் வழங்கு போகத்தைத் தா. அதுவே என்னை ஆட் கொள்ளக்கூடிய ஒரே வழி. அதன் பின் மெய்ப் பொருள் தேடுவேன். திருவெலாம் பெறுவேன். இறைவா, அருள் செய்க!