154
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா, அலைவீசும் கடல் என்பார்கள். ஆனால், அக் கடலிலும் கூட அலைகள் கரையோரத்தில்தான். ஆழ் கடலில் அலைகள் வீசுவதில்லை!
இறைவா, என் மனத்தில் வீசும் ஆசை அலைகள் அளப்பில. அவை, ஓய்வதே இல்லை! "அவா வெள்ளம்" என்ற மணிமொழி என் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பொருத்தம்!
இறைவா, ஆசை அனுபவித்தால் தீரும் என்பார்கள். இறைவா, இதுவும் என்னைப் பொறுத்தவரையில் பொய். அனுபவம் ஆசைகளை வளர்க்கவே செய்கின்றன. இறைவா, "போதும்” என்ற முடிவுக்கு மனம் வர மறுக்கிறது.
இந்த ஆசையை அடக்க ஒருவழி கூறு! ஆசைப்படுவதில் தவறில்லை. இறைவா, அப்படியா? ஆசைப்படு என்கிறாய்! நல்லது, இறைவா, அப்படியே செய்கிறேன்.
ஆனால், அதிலும் தொல்லைப்பட்ட அனுபவமே எனக்கு. அதாவது மற்றவர்கள் ஆசையை நம்மால் தீர்த்து வைக்க இயலாமல் தொல்லைப்படுகிறேன்! இஃது இயற்கை என்று கூறுகிறாயா? மற்றவர் ஆசை என்னை வளர்க்குமா, இறைவா?
என்னால் நேசிக்கப்படுபவர்களுக்கு ஆசைதிர அள்ளிக் கொடுக்க ஈட்ட வேண்டும் என்ற ஆர்வம் வளருமல்லவா? ஆம், இறைவா! ஆசைப்படுவேன். அவர்கள் தேவையை ஈடுசெய்ய ஆர்வம் காட்டி உழைப்பேன் இறைவா, இந்த மனப்பாங்கில் நிலைத்து நிற்க அருள் செய்க!