பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





மே 14


நன்மைக்காகப் போராடும் மனப்பாங்கினை அருள் செய்க!

இறைவா, நான் நல்லவனாகவே வாழ ஆசைப்படுகிறேன். ஆனால், இறைவா, நல்லவர்களாக வாழ்ந்தவர்களை இந்த உலகம் வாழவைக்கவில்லையே. எல்லாரையுமே தோற்கடித்தது மட்டுமின்றி அழித்தும் விட்டதே!

இறைவா, இந்த உலகத்தில் நல்லவனாக வாழ இயலுமா? நல்லவனாக வாழ்ந்து இறக்கத்தான் வேண்டுமா? இறைவா, ஏன் இந்தத் தற்கொலை வாழ்வு? இறைவா, மீண்டும் ஒரு தடவை அருளிச் செய்க! நன்மை ஒரு பொழுதும் தோற்காது.

நல்லவன் ஒருபொழுதும் தோற்கமாட்டான் என்றா கூறுகிறாய்? அப்படியா இறைவா! நன்மை என்பது முழு நிறைச் சொல்! நன்மையினுள் ஆற்றலும் அடங்கும்! நன்மையினுள் நன்மைக்காகப் போராடும் முனைப்பும் அடங்கும்!

நல்லவர்கள் நன்மைக்காகப் போராடும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். அப்போதுதான் நன்மை பூரணத்துவம் அடைகிறது. தீமையில்லாமையே நன்மை ஆகிறது. தீமையை எதிர்ப்பதே நன்மை ஆகிறது.

இறைவா, நன்றாக அருளிச் செய்தனை! நான் நன்மையை - பூரணத்துவம் வாய்ந்த நன்மையைக் கடைப்பிடிக்க - நன்மைக்காகப் போராடும் மனப்பாங்கை - ஆற்றலை எனக்கு அருள் செய்க!

இறைவா, அருள் செய்க!