பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

159





மே 22


பிறர் நலம் பேணும் பெருநோன்பு நோற்று வாழும் வாழ்க்கையினை அருளுக!

"இறைவா இருளே உலகத்தியற்கை இருளகற்ற கை விளக்கே கற்ற அறிவுடைமை" என்பது சான்றோர் வாக்கு! இந்த உலகில் இருட்டில் பொருள்களைப் புலப்படுத்துவது கைவிளக்கு! கைவிளக்கு ஒளியுடன் கண்ணொளியும் பொருந்திப் பொருள்களைக் காண்கிறது.

இறைவா, நான் என் மனக் கண்ணைப் புறத்தே செலுத்தாமல் என் அகத்தே திருப்பினேன். என்ன பயங்கரம்! இந்த நிலையில் வேறு, உன்னை மனத்தில் குடியிருக்க அழைத்துவிட்டேன்.

இறைவா, என் மனம் அழுக்காறு, அவா ஆகிய நச்சுப் பூச்சிகளுக்குக் கொத்தடிமையாகச் சேவகம் செய்து வாழ்கிறது. வெட்கம், புறத்தே கம்பீரமான தோற்றம். ஆனால் அகத்தே பேய்களுக்குத் தொழும்பு பூண்ட கேவல நிலை. இறைவா, என்னைத் தடுத்தாள்க என்னைத் தன்னல நயப்பின் கொடுமையிலிருந்து விடுதலை செய்தருள்க! வீண் களியாட்டங்களில் பொழுதினைக் கழித்து வாழ்ந்திடும் இழிநிலையிலிருந்து மீட்டு அருள் செய்க! பொறிகளின் நுகர்வு வழிப்பட்ட கிளர்ச்சிகளுக்கு இரையாகாத வண்ணம் மீட்டருள்க! எல்லை கடந்த பேராசைப் பிசாசிடமிருந்து தப்பித்து நிறைமனம் பெற்று வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, என்னை நானே அறியும் அறிவினைத் தந்தருள் செய்க! என் மன நிலையைத் தூய்மையாகப் பேணும் பேற்றினை அருள் செய்க!

தன்னலம் கடந்த பிறர் நலம் பேணும் பெருநோன்பு நோற்று வாழும் வகையில் வாழ்ந்திட அருள் செய்க. என் மனம் என் வசம் இருத்தல் வேண்டும்! இறைவா! இந்த ஒரு வரத்தினைத் தந்தருள் செய்க!