பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

161






மே 24


இன்றே செய்வேன்; இப்பொழுதே செய்வேன்-இறைவா!

இறைவா, உண்மையுமாய் இன்மையுமாய் நிற்கும் அண்ணலே! என் வாழ்க்கையின் பங்குதாரர்கள் என் கண் முன்னாலேயே மறைகின்றனர். அவர்கள் என்னுடன் வாழத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகவில்லை.

நான் வாழத் தொடங்கியதே நேற்று போலத்தான் தெரிகிறது. அதற்குள் எங்கள் வாழ்க்கையைத் தட்டிப் பறிக்கிறாயே இது நியாயமா? எண்ணியன செய்து முடிக்காமல் சாவது எந்த வகையில் பயனுடையது?

கூர்ந்து நோக்கினால் வாழ்நாள் மிகமிகச் சுருக்கமாகவே இருக்கிறது. இதற்குள் என்ன செய்ய! இறைவா, என்ன சிரிக்கிறாய்! எனக்கு நூறாயிரம் ஆண்டுகள் கொடுத்தாலும் நான் செய்யமாட்டேனா இறைவா, ஆம் உண்மை தான். இந்த நிமிடத்து வேலையைச் செய்யாத நான் எப்படி அடுத்த நிமிடத்தில் செய்வேன்?

இந்த நிமிடம் தாய். அடுத்து வரும் நிமிடம் சேய், தாயைப் பேணும் சேய் “நாளை செய்கிறேன்", "இனிமேல் செய்கிறேன்" என்றெல்லாம் சொல்லிப் பழக்கமாகிவிட்டது. இறைவா, என்னைக் காப்பாற்று!

நொடிப் பொழுதுகளே நிமிடமாகின்றன! நிமிடங்களே மணியாகின்றன. மணிகளே நாட்களாகி, வாரமாகி, திங்களாகி, ஆண்டாகி, வாழ்க்கையை முடிக்கின்றன. உணர்ந்து கொண்டேன். இனி என் வாழ்க்கையில் நாளை என்று சொல்வதில்லை.

இன்றே செய்வேன்; இப்பொழுதே செய்வேன். அருள் செய்க! நீ கொடுத்தாலும் எனக்கு நீண்ட ஆயுள் வேண்டாம். சில நாளே வாழ்ந்திட ஆசை. அதுவும் புகழ்பட வாழ்ந்திட ஆசை அருள் செய்க!


கு.X.11