பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





மே 25


ஐயப்படாத பெருமைமிகு வாழ்க்கையினை அருள்செய்க!

இறைவா, சிந்தையுள் தெளிவாய், தெளிவினுள் சிவமாய் நிற்கும் அண்ணலே! ஐயத்தின் நீங்கித் துணிய வேண்டிய துணிவே. அச்சத்தினை அகற்றும் ஐயனே. என் வாழ்க்கையை ஐயமும் அச்சமும் ஆட்டிப் படைக்கின்றன.

வாழ்க்கையைக் கெடுப்பதில் ஐயமும் ஒன்று. எண்ணித் துணிதல் வேண்டும். துணிந்தபின் செயற்படுத்தலே உயரிய வாழ்க்கை ஐயம்-இது பாவத்திற்குத் தலைவன். நட்பில் ஐயம், காதல் வாழ்க்கையில் ஐயம், ஆள்வினையாற்றுதலில் ஐயம், என்று போனால் வாழ்க்கையே இயங்காது.

ஆதலால் ஐயத்தின் நீங்கிய தெளிவினைத் தந்தருள்க. ஐயத்திற்கு ஆட்படாத நட்பினை வளர்த்துக் கொடுத்து அருள் செய்க! ஐயமற்ற காதல் வாழ்க்கை வளர அருள் செய்க! செய்யும் தொழில் சிறப்புடையது எனும் துணி வினைத் தந்தருள் செய்க!

நட்பு, இயற்கை காதல் இயற்கை தொழில், இயற்கை வினை, உயிர்களது இயற்கை. இந்த நிலையில் ஐயப்படாத பெருமைமிகு வாழ்க்கையினை அருள் செய்க! ஐயம் நீங்கிய நிலையில் திறந்த புத்தகம் போல் வாழ்ந்திட அருள் செய்க! ஐயத்தின் இணையாகிய இரகசியம், என் வாழ்க்கையில் வேண்டாம்.

ஐயம் நீங்கிய உறவே உறவு. ஏன், இறைவா! நின்னையே நான் ஐயப்படாமல் துணிதல் வேண்டும். நின்னையே தொழ உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இறைவா, அருள் செய்க! ஐயம் அறவே நீங்கிய நம்பிக்கையின் பாற்பட்ட நல்வாழ்க்கையை அருள் செய்க!