பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

165






மே 28


தொண்டால் வரும் துன்பம் தழுவிய வாழ்க்கை அருள்க!

இறைவா! பண்சுமந்த பாடல் பரிசுக்காகக் கொற்றாளாகி மண் சுமந்த மாதேவா! கோலால் மொத்துண்ட கோவே! புண் சுமந்த புண்ணியனே!

இறைவா, எல்லாம் வல்ல உனக்கே பண் சுமந்த பாடல் கேட்க இத்தனை இடர்ப்பாடுகள் என்றால், நான் என் வாழ்க்கைக்கு மலர்கள் தூவிய பாதையை நினைந்து நினைந்து ஏங்குகின்றேனே. தடைகளே வராத-இடர்களே குறுக்கிடாத வாழ்க்கையின்மீது எனக்கு ஆசை!

துன்பமே தலைகாட்டாத-இன்பக் களிப்பு நிறைந்த வாழ்க்கையே எனக்குத் தேவை என்று தேடுகின்றேன். தேடித் தேடி அலைகின்றேன். இறைவா, யாதொரு பயனும் இல்லை. இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறதா? கிடைக்குமா?

இறைவா, எனக்கு உண்மையை உணர்த்துக! இறைவா, நான் நினைப்பது பொய்ம்மையா? பொய்ம்மையில் உருவாகும் கற்பனையா? இறைவா, என்னை மன்னித்துவிடு. இறைவா, நீ அருளிச் செய்தது முற்றிலும் உண்மை. நான் இப்போது உணர்கிறேன். தடையே இல்லாத வாழ்க்கை - இடர்களே இல்லாத வாழ்க்கை வெற்றியாகாது. தடைகளே இல்லாத வாழ்க்கை பயனற்றது. எங்கேயும் அழைத்துச் செல்லாது! ஆம் இறைவா, உணர்ந்து கொண்டேன். என்னை இடர்கள் வளர்க்கும்; துன்பம் தூய்மைப்படுத்தும்!

இறைவா! தொண்டால் துன்பம் தழீஇய வாழ்க்கையையே அருள் செய்க. இறைவா, என்ன இருந்தாலும் நான் ஏழை. துன்பத்தில் கிடந்துழலும்போது துணையாய் இருந்து வழிகாட்டு, நெறிப்படுத்து. இவைவா, அருள் செய்க!