பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 2
தீமையை எதிர்த்திடும் திட சித்தமுள்ளவனாக வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா! உன்னை அண்டியவர்களுக்கு நீ நல்லன்! உன்னை அணுகாதவர்களுக்கு நீ நலமிலன்! இதுதான் நியதி.

இறைவா, நான் நன்மையை நேசிக்க வேண்டும். நன்மையையே நான் நாடுதல் வேண்டும். நன்மையைச் செய்ய வேண்டும். நன்மைக்குத் துணை செய்ய வேண்டும். இறைவா, அருள் செய்க.

நன்மையே என் வாழ்க்கையின் குறிக்கோளாக அமைய அருள் செய்க: இறைவா, தீமையை வெறுத்தால்தானே நன்மையை நாடமுடியும். ஆம், இறைவா! தீமையை நான் வெறுக்க வேண்டும். தீமைக்கு நான் அந்நியனாக வேண்டும்!

தீமைக்கு நான் அந்நியனாகாமல் நன்மை என்னிடம் கால் கொள்ளாதே. இறைவா! என்னைத் தீமையிலிருந்து விலக்கு! தீமையை என்னிடமிருந்து அகற்றுக. நான் தீமைக்கு - தீமை உடையோருக்கு அந்நியமாய் விளங்கும் நிலையை அருள் செய்க!

மெய்ப்பொருளாருக்குப் பக்தனாகவும், அதே போழ்து முத்தநாதனுக்கு நண்பனாகவும் ஆதல் அரிது. நான் இரண்டு எசமானர்களுக்குத் தொண்டூழியம் செய்ய இயலாது.

நன்மைக்கும் தீமைக்கும் ஒருசேர நல்லவனாக இருத்தல் ஒருபொழுதும் இயலாது. இறைவா, அருள் செய்க தீமையை எதிர்த்திடும் திட சித்தமுள்ளவனாக நான் வாழ்ந்திட அருள் செய்க!