பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 4


என் எண்ணங்கள் சிறப்புற அமைய அருள் செய்க!


இறைவா, இந்த உலகின் நியதியாக நின்றருளும் தலைவனே! நான் எண்ணுகிறேன். கருதுகிறேன். என் எண்ணங்களே என் இயக்கத்திற்கு முதல். என் கருத்துக்களே என் வாழ்க்கைக்கு முதல்!

நான் என் எண்ணத்தின் வழியதாக வாழ்கிறேன். நான் என் கருத்துக்கு இசைந்தவாறு ஒழுகுகிறேன். அதனால் என் படைப்பு, படைப்பின் தன்மை, என்னுடைய எண்ணத்தின் வழியதாகவே அமையும்!

என்னுடைய புறவாழ்க்கை, என் கருத்து எப்படியோ, அப்படியே இருக்கும். ஒவ்வொரு பறவையும் அதனதன் முட்டையைத்தான் இடுகிறது. அதுபோல, நான் என் எண்ணங்களையே சொல் ஆக்குகிறேன். என் கருத்துக்களையே காரியங்களாக்குகிறேன்!

இறைவா, என் உடனாய் நின்றருளும் தலைவனே. என் எண்ணத்தையே திருத்தியருள்க! என் கருத்தினையே திருத்தி ஆட்கொண்டருள் செய்க! நான் நல்லனவே எண்ணுதல் வேண்டும்.

என் கருத்து நின் கருத்தாதல் வேண்டும். தலைவா! இங்ஙனம் அருளிச் செய்த தலைவா நான் எண்ணுதற்குரிய என் புலன்களை உயர் நந்தனவனமாக்கி-உயர் எண்ணங்கள் கருக்கொள்ளத் துணை செய்க.

என் எண்ணங்களே நான்! என் எண்ணங்களே என் வாழ் நிலை, என் கருத்துக்களே என்னை ஊக்குவிக்கும் சக்திகள். அவை சிறப்புற அமைய அருள் செய்க!