பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 6


பிழையிலாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள் செய்க!

"இறைவா, பிழையெலாம் தவிரப் பணித்து" ஆட்கொண்டருளும் அண்ணலே! பிழை நிறைந்த வாழ்க்கையை நானும் எப்படியோ தூக்கிச் சுமந்து நடக்கிறேன். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பிழைகள்!

பிழைகளே மலிந்த வாழ்க்கையில் இழப்புக்களே நிகழும். ஈட்டம் எப்படிக் கிடைக்கும்? இறைவா, நான் இழப்புக்களேயே கூட கண்டு பதறுவதில்லை. பிழைகள் செய்தலும், இழத்தலும் பின் இவற்றை இயற்கை நியதி என்று சமாதானம் செய்து கொள்ளுதலும் என் வாழ்க்கையின் சகச நிலையாகிவிட்டது!

இறைவா! சின்னச் சின்னப் பிழைகளாக நான் செய்யும் பிழைகளைத் தவிர்த்திடுக. பல நூறு சிறு பிழைகளே ஒரு பெரிய இழப்பைத் தருகின்றன. அல்லது ஆக்கத்தைத் தருகின்றன! பிழையிலா வாழ்க்கையை அருள் செய்க!

பிழையில் சிறுபிழை, பெரியபிழை என்ற வேற்றுமை இல்லை! ஆதலால், ஒரு சிறுபிழையும் நிகழாவண்ணம் என் கடமைகளைச் செய்யும் திறனை அருள்செய்க. பிழைகள் தவிர்ந்த வாழ்க்கையே வாழ்க்கை!

பிழைகள் செய்யா வாழ்க்கையை நடத்த அருள் செய்க! நின்னருள் காட்டும் நெறியில் நெறி பிறழாது வாழ்ந்திடுவேன். இது உறுதி!

இறைவா, இதுவரை நிகழ்ந்த பிழைகளைப் பொறுத்து அருள்க! இனிமேல் வரும் பிழையெல்லாம் தவிர்த்தாட் கொள்க. நான் பிழையிலாப் புகழ்மை படைத்த பெருவாழ்வு வாழ்ந்திட அருள் செய்க!