பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

175






ஜூன் 7


திட்டமிட்டுப் பணி செய்ய அருள் செய்க!


இறைவா! மூன்றாய் உலகம் படைத்து உகக்கும் எம் தலைவனே! இந்த உலகை நீ ஆண், பெண், அஃறிணை என்ற முத்திறத்தால் படைத்திருப்பது ஒரு சிறந்த திட்டம்! நீ திட்டமிட்டுச் செய்ததால் உலக இயக்கத்தில் ஒழுங்கமைவும் மாறா முறையும் இருந்து வருகின்றன.

இறைவா, என் வாழ்க்கை மாறா முறைகளை அவாவி நிற்கிறது! ஒழுங்கமைவு தேவை! இறைவா. நானும் திட்டமிட்டு வாழக்கற்றுக் கொண்டால் என் வாழ்விலும் சிறப்புடைய மரபுகள் கால் கொள்ளும்; முறைகள் தோன்றும்.

இறைவா, வரைபடம் இல்லாது கட்டடம் கட்ட இயலுமா! பல சின்னஞ்சிறு செயல்கள் கூட மனத்துள் திட்டமாகி, உருப்பெற்றுச் செயற்பாட்டுக்கு வருதலே இயற்கை!

ஆனால் நானோ என் பணிகளுக்குத் திட்டமிடாமல் கண்டதை - கைக்கு எட்டியதை - பிறர் என் வாழ்க்கையில் திணிப்பதைச் செய்து கொண்டிருக்கிறேன். என் வாழ்நாள் நெருக்கடியிலேயே கழிகிறது. பணிகளின் மிகுதியால் ஏற்பட்ட நெருக்கடியன்று!

காலத்தால் கருதாத பிழை! திட்டமிடாது கடைசி நேரத்தில் செய்வது! ஒரே பரபரப்பு! இது என் வாழ்க்கையில் திட்டமிடாததனால் ஏற்பட்ட விளைவு! சென்ற நொடிப் பொழுது எப்படிப் போயிற்றோ அதை அடியொற்றித்தான் அவ்வழியில்தான் அடுத்த நொடியும் செல்லும்.

இறைவா! நான் என் பணிகளுக்குத் திட்டமிட ஆணை தந்தருள்க. நான் எனக்குக் கிடைத்துள்ள பொழுதை முற்றாகப் பயன்படுத்தத் திட்டமிடுதலே வழி என் ஆற்றல் முழுதையும் திட்டமிட்டுப் பயன்படுத்திப் பணிசெய்ய அருள் செய்க!