பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

177






ஜூன் 9


மூலநோய் முதல் கொள்முதல் நோய்வரை நீக்கியருளுக!

இறைவா, ஆரூரர் போன்ற அருட் செல்வர்கள் "நீ யல்லாது துணை பிறிதிலனே" என்று போற்றிய கடவுளே! நீயலால் எனக்குத் துணை யார்?

இறைவா, ஒப்புக்குப் பலர் "நான்", "நீ" என்று வரலாம். ஆனால் உன்னைப் போல் என்னை ஆட்கொண்டருளிச் செய்யும் தலைவன் எனக்கு யாருளார்?

பிழையெலாம் பொறுத்து ஆட்கொள்வாய். இறைவா, நீயே எனக்குத் துணை. இது நான் தெரிந்து எடுத்த முடிவு. உனக்கே நான் அடைக்கலம்.

இறைவா, நீ என்னை ஆட்கொண்டருளுதல் வேண்டும். நின் பணி பிழைக்கின் புளியம் வளாரினால் மோது. அடித்து அடித்துத் திருத்து. நான் உன் உடைமை. நீ என்னை ஆட்கொண்டருளாது போனால் சவலையாய் என் வாழ்நாள் கழிந்து போகும். இறைவா, அருள்பாலித்திடுக.

இறைவா, கருணை காட்டுக! என் வாழ்வில் நீங்காத் தனித்துணை மருந்தாக வந்தருளி மூலநோய் முதல் கொள்முதல் நோய்வரை நீக்கி அருள் செய்க! இன்பக் கிளுகிளுப்பை வழங்கி அருள்க! எம் துணைவா! அருள் செய்க!

கு.x.12