பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

179






ஜூன் 11


உழைப்பாளியாக உழைத்து வாழ்ந்திட அருள்செய்க!

இறைவா, திட்டமிட்டு உலக இயக்கத்தை இயற்றும் இறைவா, என் வாழ்க்கையில் இன்னமும் திட்ட அமைவு கால் கொள்ள மறுக்கிறது. அதனால் ஒழுங்கமைவு இல்லை.

ஒழுங்கமைவு இன்மையால் ஆக்கம் இல்லை. ஆக்கம் இல்லாததால் இன்பமும், மகிழ்வும் இல்லை. இவை யனைத்தும் காரணகாரியத்தொடர். ஆனால் நானோ எதற்கும் சமாதானம் கற்பித்து வருகிறேன். இதனால் என்ன பயன்? தற்காலிகமான மனச்சாந்தி. அவ்வளவு தானே?

இழந்த ஆக்கம் திரும்ப வரப்போகிறதா? இறைவா, என்னுடைய திட்டமிட்ட வாழ்க்கையை இன்றே தொடங்க அருள் செய்க! ஆம் இறைவா, ஒவ்வொரு நொடிப்பொழுதும், பணி செய்ய வேண்டும்.

பயனுடைய பணி செய்ய வேண்டும். இறைவா, நான் உண்ணும் உணவு உழைப்பின் விளைவு. இயற்கையின் ஓய்விலாத உழைப்பும், உழவரின் உழைப்பும் சேர்ந்தளித்த கொடையே, நான் உண்ணும் உணவு.

நான் உண்ணும் ஒவ்வொரு கவளமும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. ஆம், "உழைப்பை உண்கிறாய், திரும்ப உழைப்பை, உழைப்பால் ஈடு செய்ய மறுக்கிறாயே" என்று!

இறைவா, என் உடலாற்றலின் ஒரு சிறு பகுதியும் வீணாகாமல் பயன்படத்தக்க வகையில் திட்டமிட்டு உழைக்கும் உறுதியைத் தா. உழைப்பே உலகு! தெய்வம்! எல்லாம் உழைப்பின் பயனே! உழைப்பாளியாகவே உழைத்து வாழ்ந்திட அருள் செய்க!