பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 12


இறைவா, வாய்ப்புகளை நழுவ விடாத பாக்கியசாலியாகிட அருள் செய்க!


இறைவா, காலத்தின் காலமாகி நிற்கும் கடவுளே! "காலம்" ஓயாது. நில்லாது இயங்கிடும் இயக்கம். ஒரு காலத்தைப் போல் பிறிதொரு காலம் இருக்காது. ஆதலால், ஒவ்வொரு நொடியையும் முழுமையாகப் பயன்படுத்தி ஆக்கம் தேடுதலே வாழ்வு சிறக்க வழி.

இந்தப் பரந்த உலகத்தில் எனக்கு உதவி செய்யக் கூடியவர்கள் சில சந்தர்ப்பங்களில்தான் கிடைக்கிறார்கள். நான் அவர்களுடைய உதவியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. என்னே! என் செயலின்மை.

இறைவா, எனக்கு ஒவ்வொரு நொடிப் பொழுதும் வாழும் திறனை அருள் செய்க. என்னுடைய உதவியாளர்கள் நான் சுண்டுவிரலைக் காண்பித்தால் அதனைப் பற்றிக் கொண்டு மேலே ஏறும் திறனை அருள்செய்க!

கிடைத்த வாய்ப்புகளைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு உறுதியுடன், அழுத்தமாக முயன்றால் எண்ணற்ற காரியங்களைச் சாதிக்கலாம். இறைவா, எனக்கு உதவிக்கு வருபவர்கள் எனக்கு வாய்த்த செல்வமாவர். அவர்தம் உதவிகளே என்னை வளர்ப்பவை. இத்தகு வாய்ப்பு ஒரோ வழிதான் வந்தமையும்.

இறைவா, நான் நழுவ விடாத நற்பாக்கிய சாலியாக வாழ்ந்திட அருள்செய்க. எனக்கு உதவி செய்வோர் மனம் மகிழ நான் என் வாழ்க்கையில் உயர அருள் செய்க!

கிடைக்கும் சிறு உதவியையும் பெரிய காரியமாக வளர்த்துப் பயன்கொள்ளும் ஆற்றலினை வழங்கியருள்க. உதவி செய்தார்மாட்டு நன்றியும், கடப்பாடும் உடையவனாக வாழ்ந்திட அருள்செய்க!