பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

181






ஜூன் 13


உழைக்கும் தொழிலாளியாக வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, நீ ஒரு தொழிலாளி. உயிர்க்குலத்தைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளும் தொழிலாளி. இது ஒரு மாபெரும் வேலை. இடையீடு இல்லாது, ஓய்வில்லாது, தற்செயல் விடுப்புக்கூட இல்லாது செய்யப்பெறும் வேலை.

இறைவா, நீ விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிற சமூகப் பணிகள் வேறு உள்ளன. வந்திக்காகக் கொற்றாளாகப் போய் மண் சுமந்தனை. ஆரூரருக்குப் பெண் தேடி, நண்பன் தேடித் தந்தாய். தாயாகி மகப்பேறு மருத்துவம் பார்த்தாய். மாமனாகி வழக்குரைத்தாய்.

இறைவா, ஓயாது உழைக்கும் தொழிலாளி நீ எனக்கோ மணிக்கணக்கில் வேலை. என் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதான் வேலை. ஏதோ செய்வேன். "என்ன செய்தாய்? என்ன பயன்?” என்று மட்டும் கேட்டுவிடாதே. நான் தொழில் செய்யவில்லை என்பதைச் சுற்றியுள்ள உலகமே பறை சாற்றுகிறதே.

ஒன்றை, பதின்மடங்கு பயனுடையதாக்கி மதிப்பு உயர்த்தி வாழ்தலே தொழில் வாழ்க்கை நான் தொழிலா செய்கிறேன்? இதிலும் பாவனைதான். பாவனையே பெருகிப் பாவத்தைப் பெருக்குகிறது.

இறைவா, என்னைப் பாவத்திலிருந்து மீட்பாயாக! தொழில் செய்யும் மனப்பான்மையை அருள்செய்க. நான் உண்மையில் ஓர் உழைக்கும் தொழிலாளியாக வாழ்ந்திட அருள் செய்க!

என் தொழில் திறத்தால் இந்த வையகம் முழுதும் பாலித்திட அருள்செய்க! இறைவா, நான் தொழிலாளி என்பதை உணர்த்திய கருணைக்குப் போற்றி! போற்றி!!