பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 14


சமநிலை மனம் தந்தருள் இறைவா!

இறைவா, வேண்டுவார் வேண்டுவதே ஈந்து புகழ் சுமக்கும் புண்ணியனே. இறைவா, எனக்குத் தேவை நிறைய இருக்கிறது. எனக்குத் தேவை அறிவு. அறிவை நீ தரமுடியாது. கற்பதன்மூலம் பெறுவது அறிவு. எனக்குத் தேவை செல்வம். நீ செல்வத்தைத் தரமுடியாது. செல்வம் உழைப்பினால் படைக்கப்படுவது. எனக்குத் தேவை அமைதி அமைதி சமநிலை உணர்வால் தோன்றுவது. இதுவும் ஒருவர் தந்து ஒருவர் பெறுவது அல்ல. இறைவா, இவையெல்லாம் என் தேவை.

இவற்றையெல்லாம் நான் பெற ஆசைப்படுகிறேன். ஆனால், பெறுதலுக்குரிய முயற்சி சிறிதும் இல்லை. இறைவா, அது மட்டுமா! இவையெல்லாம் எளிதில் பெற இயலாது. அதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்ற சமாதானத்தையும் செய்துகொண்டு ஊன் பொதி சுமந்து உயிர் வாழ்கின்றேன். என் செய்ய? நின் கருணை என்பால் விழவில்லை.

நான் கற்கும் முயற்சியில் ஈடுபடும் முனைப்பை நீ எனக்கு அருள்செய்! செல்வத்தைத் தப்பாது தரும் உழைப்பு எண்ணத்தைத் தந்தருள்செய்க. விருப்பு, வெறுப்பற்ற சமநிலையில்தான் அமைதி என்றுணரும் ஞானத்தினைத் தந்தருள் செய்.

இறைவா, "இயலாதது, முடியாதது, இவ்வளவுதான் முடிகிறது, கொடுத்து வைத்தது இவ்வளவுதான்" என்ற சைத்தான் தத்துவங்களை மூளையிலிருந்து அகற்றி அருள் செய்க!

கற்றனைத்து அறிவு ஊறும். உழைப்பளவு செல்வம் தப்பாமல் விளையும். சமநிலை மனம் அமைதி தரும். இவற்றை என் வாழ்க்கையில் கடமைகளாக, நோன்புகளாக ஏற்று வாழ அருள்செய்க! இறைவா, இயலாமை இல்லாமல் போக அருள்செய்க!