பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 16


எப்பணியையும் திறம்படச் செய்ய இறைவா அருள்க!

இறைவா, வித்தின்றியே விளைவு செய்யும் வித்தகனே! நின் ஆற்றல் அளப்பிலாதது. ஒன்றுக்கும் ஆகாத கழிவுகளையே எருவாக்கி, படைக்கும் ஆற்றல் உடையதாக்கி விடுகிறாய்.

இறைவா, நான் ஒரு பொல்லாத மனிதன். எனக்கு நீ வழங்கிய அறிவுக் கருவிகளின் அற்புதம் என்னே! ஆனாலும் நான் என்ன செய்கிறேன். வீணில் உண்டு உடுத்து செத்து கொண்டிருக்கிறேன். இறைவா, என்னைத் திருத்து, என் புத்தியைத் திருத்து.

எனக்கு வாய்த்த வேலைகள், பணிகள் எவ்வளவு சிறியதாக இருப்பினும் நான் அதை ஏற்று உவப்புடன் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல இறைவா, நான் செய்தால் போதாது - நான் திறம்படச் செய்யவும் வேண்டும்.

சிறிய வேலைகளே பெரிய வேலைகளுக்குரிய வாயில்கள். இறைவா, பணிகளில் அற்பமான பணி எது? யாதொன்றும் இல்லை.

தெருக்களைக் கூட்டித் துப்புரவு செய்யும் தொழிலும் கூட அதன் தன்மையில் மிக மிக உயர்ந்த தொழில். கோடான கோடி மக்களை நோயினின்று பாதுகாக்கும் தொழில். அதனாலன்றோ அப்பரடிகள் பார் வாழத் திருவீதிப் பணி செய்தார்.

இறைவா, எந்தப் பணியும் நல்ல பணியே! எப்பணியும் செய்யும் திறத்தில்தான் சிறக்கிறது. இறைவா. எந்த ஒரு பணியையும் திறம்படச் செய்ய அருள் செய்க!