பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 24


பணியே, வாழ்க்கைக்கு அணி. அருள் செய்க!

இறைவா, எழுதிக் காட்ட இயலாத அருளே! பொழுது புலர்ந்தது. கதிரொளி படர்கிறது. உலகத்திற்குப் பொழுது விடிந்து விட்டது. ஆனால் எனக்கு இன்னும் விடியவில்லை. இருளே தொடர்கிறது. துன்பங்களில் கிடந்து எய்த்துப் போனேன். இறைவா, இது சமயம், எடுத்தாள்க.

இறைவா, நான் உன் மகவு, உன் அடிமை; இது என்றோ முடிந்த முடிவு. நானோ பிழை செய்கிறேன். என் உடல் பொருள் ஆவி மூன்றையும் உன்னிடத்தே ஒப்புவித்தேன். அன்றே நீ எடுத்துக் கொள்ளவில்லையா?

இறைவா, என்மேற் குறை சொல்வது நியாயமா? இனி என்மீது குறை சொல்ல வேண்டாம். இறைவா என்னை எழுப்பியருள்க! என் சித்தம் தெளிவித்தருள் செய்க! நான் செய்ய வேண்டிய பணிகளை மெல்ல எடுத்துக் கூறிப் பணி கொள்க. நின் பணி பிழைக்கில் என்னைத் தடிந்தும் பணி கொண்டு அருள்பாலித்திடுக.

இறைவா, ஒருமையில் உலகம் இயங்கிடச் செய்ய வேண்டும். எங்கும் சமரசமும்-சமாதான சகழ்வாழ்வுமே நிகழ்ந்திடுதல் வேண்டும். மதம் பிடித்தவர்களின் வாய் கொழுப்புகள் அடங்கவேண்டும். இறைவா, நன்றருளிச் செய்தனை என் தூக்கந் தவிர்ந்தது. என் அறிவு விழிப்புற்றது.

இறைவா, என்னை ஆட்கொண்டருளிய தலைவனே! நான் செய்ய வேண்டிய பணிகளைச் சொல்லியருள் செய்க! இறைவா, உறக்கம் தவிர்த்திடுதல் வேண்டும். ஒருமைப்பாடு காண வேண்டும். சாதி சமய ஆசாரங்கள் தவிர்த்திடுதல் வேண்டும். மதமெனும் பேய் பிடிக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும்.

இறைவா, என்னைப் பணி கொண்டருளும் தலைவா! நின் பணி ஏற்றேன். செய்வேன். நின் பணி பிழைக்கில் அடித்தும் அருள் செய்க! பணியே வாழ்க்கைக்கு அணி அணியே பணி.