பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 26


மாறா அன்பு செய்யும் பண்புள்ளத்தைக் கொடு


இறைவா, என் பிழைகள் பொறுத்தாளும் புண்ணியனே. இறைவா, நான் ஒரு பேதை, அறியாமையே என் உடைமை. நன்றும் தீதும் உணராமல் பிழை செய்கின்றேன்.

இறைவா, நான் ஒரு பேய், பேய், குறிக்கோள் இல்லாதது; குறிக்கோள் இல்லாமலே சுற்றும் தன் கண்ணில் பட்டவர்களைப் பிடித்துக் கொள்ளும்; அவர்களை இடமாகக் கொண்டு ஆடும். நானும் அங்ஙனமே குறிக்கோள் இல்லாது வீணே வாழ்கிறேன். வாழாமல் வாழ்கிறேன். யாதொரு பயனுமின்றி வாளா உழல்கிறேன்.

இறைவா, நான் ஒரு நாய். அதுவும் ஊர் நாய். இல்லை, இல்லை. நாய் என்னிலும் சற்று உயர்ந்தது. சோறு போடுபவனுக்கு நாய் நன்றி காட்டும், வாலாட்டும். நான் அங்ஙனம் இல்லையே! எனக்கேது நன்றி. நல்லவற்றில் மறதி. பொல்லாங்கில் அபார நினைப்பு.

இறைவா, நான் ஒரு பித்தன். என் சித்தம்போக்கு என் போக்கு. நான், ஒருநெறி பற்றுவதில்லை, நிற்பதில்லை. நான் செய்த மோசமான பிழைகள் எவ்வளவு? ஒன்றா? இரண்டா? இல்லை. என் வாழ்க்கை பிழை மலிந்த வாழ்க்கை

என் பிழைகளைக் கண்டு, திருத்தித் தீர்வு கண்டு என்னை ஆட்கொள்வது என்றால் இப்பிறப்பில் ஒன்றும் நடக்காது. இறைவா, ஆதலால் நின் திருவுள்ளம் என் பிழைகளைப் பொறுத்தாட் கொண்டது. இறைவா, நின் கருணைக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள்.

இறைவா, நான் என் வாழ்க்கையில் மற்றவர் செய்யும் பிழைகளை - இழைக்கும் துன்பங்களைப் பொறுத்தாற்றிக் கொள்ளும் பண்பினைக் கற்றுத் தா! என்னைச் சுற்றி வாழ்பவர்களிடம் நான் துன்பம் அனுபவித்தாலும் நான் மாறா அன்பு செய்யும் பண்புள்ளத்தைக் கொடு. இதுவே கருணை, அருள்! இறைவா, அருள் செய்க!