பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

199






ஜூலை 1


இறைவா, சிறந்த கடமைகள் செய்வதில் ஈடுபடுத்தி
ஆட்கொள்க!


இறைவா, இடர்களையும் ஏந்தலே! போற்றி! போற்றி!! இறைவா, என்னை மன்னித்துக் கொள். ஒரு சாதாரண ஆன்மாவாகிய என்னை ஆட்கொண்டால் என்ன? எண்ணியன முடித்துத் தந்தால் என்ன?

இறைவா, ஓரளவு நான் நல்லவனே. இறைவா உன்னை வேண்டுவது எனது நலன் மட்டும் அல்லவே! மற்றவர் நலன் நோக்கிச் செய்யும் பணிகளில்கூட தடங்கல்கள்! தன்னார்வமுடைய தோழர்களைக் காணோம். நீயோ துணை செய்ய மறுக்கிறாய். இறைவா, ஏன் இந்தச் சோதனை.

நான் ஒரு சாமான்யன், ஆரூரர், திருவாதவூரர், திருநாவுக்கரசர் ஆகியோரின் நெஞ்சத்தைப்போன்ற நெஞ்சம் பெறும் பாக்கியம் பெற்றேனில்லை! நீ அவர்களிடத்தில் நிகழ்த்திய சோதனைகளுக்கு அவர்கள் ஆளானது போல் நான் ஆளாக இயலாது. இறைவா, நன்றருளிச் செய்தனை.

என்னுடன் ஆன்மா வலிமை பெற வேண்டும். ஆற்றல்களைப் பெறவேண்டும். குறிக்கோளில் நிலை கொண்டு வாழ்ந்திடல் வேண்டும். ஆம், இவை அனைத்தும் எனக்குத் தேவைதான். இறைவா, சிறந்த காரியங்கள் செய்வதன் மூலமே ஆன்மா பூரணத்துவம் அடைகிறது.

சிறந்த காரியங்களை-விடா முயற்சியுடன் செய்வதன் மூலமே ஆன்மா ஆற்றல் பெறுகிறது. சிறந்த செயல் செய்யும் முயற்சியில் ஏற்படும் இடர்களைத் தாண்டுவதன் மூலமே ஆன்மா வலிமை பெறுகிறது. சிறந்த முயற்சியில் ஆன்மா ஈடுபடும்பொழுது பெறும் இன்ப துன்பங்களில் காட்டும் சமநிலையிலேயே ஆன்மா தூய்மை பெறுகிறது. இறைவா, அறிந்து கொண்டேன். இடர்களும், வாழ்த்துக்கள் என்று வரவேற்கத்தக்கன. இறைவா, சிறந்த செயல்களைச் செய்வதில் ஈடுபடுத்தி ஆட்கொள்க!