பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




ஜூலை 2


இறைவா, சாவா வாழ்வினை வழங்கி யருள்செய்க!

இறைவா, எல்லா உலகமும் ஆனாய் நீயே, நின் திருவருள் போற்றி! போற்றி!! இறைவா, நான் இறக்க அச்சப்படவில்லை. என்றோ ஒரு நாள் இறக்க வேண்டியது தானே! ஆனால் இறைவா, நான் சாவதற்குக் கூச்சப்படுகின்றேன்.

இறைவா, என்னைச் சாவிலிருந்து காப்பாற்று. இருந்தும் இல்லாமல் இருப்பது; நான் வாழ்ந்தும் பயன் படா நிலையில் வாழ்வது; நான் உண்டும் உணர்விலாப் பிண்டமாய் வாழ்வது; உண்டு, உடுத்து, உறங்கி வாளா வாழ்வது இவை சாவு நிலைகள். இறைவா, இத்தகைய சாவிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள ஓய்விலாது உழைத்திடும் பேற்றினை அருள் செய்க! ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வினை வழங்கியருள் செய்க!

வாழ்க்கை விரிவு நோக்கியது. விரிந்து கொண்டு செல்வதே உயிர்ப்புள்ள வாழ்க்கை. அதிலும் ஓயாது விரிந்து கொண்டிருப்பதே வாழ்க்கையின் உயிர்ப்பு நிலை, வாழ்நிலை!

இறைவா, எல்லைகள், வேலிகள் இவை அறியாமையின் படைப்புகள். ஆணவத்தின் அடையாளங்கள். இறைவா, என் வாழ்க்கை எல்லைகளைக் கடந்ததாக விரிவடைய வேண்டும்.

என் அன்புக்கு எல்லை இருத்தல் கூடாது. நான் உழைத்து உறவு கொள்ளும் உலகம் விரிவுடையதாக அமைய வேண்டும். குறுகியது எதுவும் சாவு. தன்னைப் பற்றியே சிந்திப்பவன் பேய். இந்த இழிநிலை வேண்டாம்.

என் வாழ்க்கை ஓயாது விரிவடைய அருள் செய்க! எந்நாட்டவரும் என் சகோதரர். அனைத்துயிரும் என் உறவு. இப்படியே எண்ணி, வாழ்ந்து பணி செய்திடப் பணித்திடுக. சாவா வாழ்வினை வழங்கியருள் செய்க!