பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜூலை 6


இறைவா, என் வேலையின் நோக்கம் வையகம் பயனுற
வாழ்வதே. அருள் செய்க!

இறைவா, உயிர்களை ஆட்கொண்டருளும் அண்ணலே, ஐந்தொழில் நிகழ்த்துகிறாய். உனது ஐந்தொழிலின் நோக்கம் உயிர்களை ஆட்கொள்வது.

நானும் தொழில் செய்கின்றேன். வேலை செய்கின்றேன். "என் வேலையை நான் ஏன் செய்கின்றேன்! எதற்காகச் செய்கின்றேன்?" இந்த வினாக்களுக்கு விடை சொல்லத் தெரியாது.

இன்று நான் ஏன் தொழில் செய்கின்றேன்? வேலை செய்கின்றேன்? - பிழைப்பு நடத்த, பொருள் செய்ய, என்று சொல்லத் தோன்றும். ஆனால், ஒரு வேலையின் நோக்கம் "பிழை"ப்பாக இருத்தல் இயலாது; இருக்கக் கூடாது.

வேலையின் நோக்கம் கூலியில்லை. 'பிழைப்பு' இல்லை அப்படியிருந்தால் இந்தப் பரந்த உலகத்தில் வளம் குறையும். சிறப்பு வராது. அப்படியானால் இறைவா, என் வேலையின் நோக்கம்?

உயிர்க் குலத்திற்கெல்லாம் வாழ்வு அளித்தல் வேண்டும். மானிட சாதியை வறுமையிலிருந்து மீட்டு எடுத்தல், மனித குலத்தின் பெரும்பகையாகிய அறியாமையை அகற்றுதல், மனித குலப்பிரிவினைகளான சாதி, குல, இனச் சண்டைகளை அறவே அகற்றுதல், ஒரு குலம் உருவாக்குதல், ஒப்புரவு நெறி தழைக்கச் செய்தல், எல்லாரும் இன்புற்றிருக்க நினைத்து உழைத்தல் - இவை என் வேலையின் நோக்கமாகிட வேண்டும்.

இறைவா, நான் தொழில் புரியவேண்டும். வேலை செய்யவேண்டும். என் வேலையின் மூலம் நாட்டு மக்கள் பயனுற வேண்டும்! என் வாழ்க்கையின்- வேலையின் நோக்கம் - வையகம் பயனுற வாழ்தலே என்று கொண்டுள்ளேன். இறைவா அருள் செய்க!