பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

205



ஜூலை 7


உலகத்தோடு ஒட்ட ஒழுகி வாழ்ந்திட அருள்செய்க!

இறைவா, கருணை நிறைந்த கடவுளே, போற்றி! போற்றி!! இறைவா, நான் இந்த உலகில் வாழ்கிறேன். நான் பலரோடு வாழ்கிறேன்.

ஆனால், என்னோடு யாரும் ஒத்துவர மறுக்கிறார்கள்; ஒத்து வருவதில்லை. நான் என்ன செய்ய? இறைவா, என்ன அருளிச் செய்கின்றனை? நான்தான் ஒத்துப்போக வேண்டுமா? உலக்தோடு ஒட்ட ஒழுகுதல், நல்லது! இன்றைய உலகம் என்பது வல்லாங்கு வாழ்பவர்கள் உலகமாக அன்றோ இருக்கிறது!

இந்த உலகத்திற்கு நியாயத்தைப் பற்றிய கவலை இல்லை. பண்பாடு பற்றியும் கவலை இல்லை. ஏன் - என்ன செய்ய வேண்டும் என்ற கவலையே கூட இல்லை. இறைவா, இவர்களுடன் எப்படி ஒத்துப்போவது? இறைவா, நன்றருளிச் செய்தனை. தற்காப்பு உணர்வுடன் ஒத்துப் போகச் சொல்கின்றாய்! அவர்களோடு பழக வேண்டும்! ஆனால், கலந்துவிடக்கூடாது. எதிர்மறையாக அணுகுதல் எதிர் விளைவுகளையே உண்டாக்கும். உடன்பாட்டு அணுகு முறையில் தீமை மாறாது போனாலும் கட்டுக் கடங்கி நிலவும். அதுவே, ஒரு பாதுகாப்பு இல்லையா? இறைவா, மிகவும் நல்ல ஆலோசனை.

நல்லன எண்ண வேண்டும், நல்லன செய்ய வேண்டும். நல்லாருடன் இணங்கி இருத்தல் வேண்டும். இறைவா, இப்படியே அருள் செய்க! நின் திருவருளால் நல்லவனாகவே வாழ்வேன். போற்றி! போற்றி!!