பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜூலை 8


கொம்பினைச் சார்ந்த கொடிபோல், உன்னைச் சார்ந்து
வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, தமியேன் புகலிடமே, புண்ணியமே. நான் அலமருகின்றேன். என் அகநிலையிலும் தாக்குதல், புற நிலையிலும் தாக்குதல். நான் உய்யுமாறு என்ன?

இறைவா, என்னோடு ஒத்துவராத ஐவரைக் கூட்டு வைத்தாய். அவர்கள், வலிய நின்று போராடுகின்றனர். உவப்பன கொடுத்தனுப்ப முயன்றாலும் அவர்கள் என் ஆற்றலை விஞ்சிக் கேட்கின்றனர்.

புழுவை எறும்பு அரித்தொழிப்பது போல, என்னைப் புலன்கள் அரித்தொழிக்கின்றன. நாள்தோறும் வெம்பி வெம்பிச் சாகின்றேன். நான் இறப்பதற்கு அஞ்சவில்லை. ஆனால், செத்துப் போகக் கூடாது.

என்னைச் சுற்றிப் பணத் திமிங்கலங்களின் நடமாட்டம். நான் என்ன செய்வேன். பற்றிப் படரக் கொம்பில்லாத ஒரு கொடி காற்றில் அலமந்து சுழல்கிறது. அற்று விழும் நிலையில் சுற்றுகிறது. இறைவா, நானும் அங்ஙனே. உன்னையே நான் கொழுகொம்பாகப் பற்றி நிற்க முனைகின்றேன்.

இறைவா உன்னை எனக்கு அளிக்காமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறாய். நான் உன்னைக் கண்டும் கண்டிலேன். நான் படும் துன்பம் இனி எற்க இயலாது. பட்டது போதும் என்னைக் காப்பாற்று.

நான் அன்பால் பூத்துச் செயல்களால் காயாகி, ஒப்புரவால் கனியாகிச் செழித்து வாழ்ந்திட அருள் செய்க! இறைவா, என்னை ஒதுக்கி வைத்திடாதே! என்னை ஆட்கொள்வதற்குரிய பத்திரம் நின்னிடம் உள்ளது. கொம்பினைச் சார்ந்த கொடிபோல என் வாழ்வு செழித்து வளர்ந்து அன்பு மணம் கமழ அருள் செய்க!