பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

207



ஜூலை 9


எனக்கு நின்னருள் தேவை! ஆண்டருள் செய்க!

அத்தா, அடியேனுக்கு அருள் பாலித்த அண்ணலே! நின் அருள் நோக்கில் ஆட்கொள்ளும் ஐயனே! நின் திருக்கருணை போற்றி! போற்றி!! இறைவா, நான் ஒரு நெறிப்படாதவன். பித்தனாகப் பல நெறிகளிலும் சென்று சென்று உழல்கின்றேன்.

நான் கற்றுணர்ந்தவனுமல்லன், படிப்பினைகளால் உணர்ந்தவனும் அல்லன்; யாதும் உணராதவன். இறைவா, யாதொரு பயனும் இன்றி உழன்று கொண்டிருக்கின்றேன். பேயனையேன். நாயனையேன். நான் நிறையப் பிழை செய்தேன்; செய்து கொண்டிருக்கிறேன்.

நான் செய்த குற்றங்கள் ஒன்று இரண்டல்ல; பல குற்றங்கள். இறைவா, என்னை ஒறுத்திட மாட்டாய் என்ற உறுதியான எண்ணம் இருக்கிறது. நீ சால அன்புடையவன். அதனால் ஒறுத்திட மாட்டாய். இது என் நம்பிக்கை. அதுவே நான் உன்னிடம் இரந்து கேட்பது.

இறைவா, நான் செய்த-செய்யும் குற்றங்களைத் திருவுள்ளத்தில் கொள்ள வேண்டாம். என் குற்றங்களுக்குத் தீர்வு காண இயலாது. ஆதலால், இறைவா, எனக்கு உறுதி-உய்தி குற்றங்களுக்குத் தீர்வு காண்பதன்று. என் குற்றங்களை நீ பொறுத்தருளல் வேண்டும்.

இறைவா, என்னை என் பிழைகளைப் பொறுத்தருள் செய்க! இனி நான் ஒரு நெறியில் மனம் வைத்தொழுகுவேன். உணர வேண்டியவற்றை உணர்ந்து நடப்பேன், ஒழுகுவேன். பயனுள்ளவாறு நின் வழியில் வாழ்வேன். பகடுபோல் - ஏறு போல் உழைத்து வாழ்வேன். இறைவா, எனக்கு நின்னருள் தேவை. ஆண்டருள் செய்க!