210
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஜூலை 12
|
இறைவா, மூலநோய் தீர்க்கும் முதல்வா! நோயில்லா வையகம் அருளக் கூடாதா? இறைவா, எனக்கு நோய் என்றால் பயம். ஆம். நோய் என்னோடு மட்டும் நிற்பதன்று. என்னைச் சார்ந்தாரையும் தொற்றுகிறது. ஆதலால் நோயற்ற வாழ்க்கையை நான் விரும்புகிறேன்.
இறைவா. உன்னிடம் இரந்து கேட்கிறேன். கழுபிணியில்லா பாக்கையை அருளிச் செய்க! நோயற்ற வாழ்க்கையை அருள் செய்க! நோய்க்கு மருந்து வேண்டாம், நோய்க்குரிய காரணங்களையே மாற்றுக.
இறைவா, பெரும்புலர் காலை எழுதல், கதிரவன் ஒளியில் தோய்தல், மெல்லென வீசும் பூங்காற்றில் குளித்தல், உழைப்பின் கொள்கலமாகிய உடலினை உழைப்பில் வருத்துதல், குளிர் புனலில் மூழ்கித் திளைத்தாடுதல் இவைகள் வாழ்க்கையின் பயன்களாகட்டும்.
உடலுக்கிசைந்தது உண்ணுதல்; மிதமாக உண்ணுதல், நறுநீர் குடித்தல், உயிர்க்காற்றினை முறையாக உயிர்த்தல், இவற்றில் கவனமாக இருத்தல், உடலியக்கத்துக்குரிய குருதி ஓட்டத்தினை இயக்கும் இதயத்தினை உறுதிப்படுத்தும்.
இதயத்தினை அன்பினில் நனைத்தல், சமநிலைப் பேணுதல் - இவை என் இயல்பாக அமைய ஒழுகுதல், நின் திருநாமம் எண்ணுதல், பொறிகளின் வசமாகாமல் நின் திருவருள் வசமாதல், நின் திருவருளை நினைந்து நினைந்து ஒழுகுதல் இவையாவும் வேண்டும்.
நின் திருவருளையே நாடுதல், நின்னையன்றிப் பிறி தொருவர் உண்டென நம்பாமை, அவர்பின் செல்லாமை ஆகியன என் நிறை நலமிக்க ஒழுக்கங்களாக விளக்கமுற அமைய அருள் செய்க! இங்கனம் என் வாழ்க்கையை அமைத்து நோயின்றி வாழ அருள் செய்க!