பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜூலை 14


இறைவா, நான் என்றும் குழந்தைபோலவே வாழ


இறைவா, பாலனாகித் தொட்டிலின்பத்தைத் துய்த்த தலைவா! நான் மனிதனாகி விட்டேனே. என் பொல்லாத காலம் என்னை வளர்த்துப் பொல்லாதனவெல்லாம் கற்றுக் கொடுத்து, என் வாழ்வியலைக் கரடு முரடாக்கி விட்டதே. இனி நான் என்ன செய்ய.

மீண்டும் அந்தக் கள்ளமற்ற, கணக்குகளைக் கடந்த குழந்தைப் பருவம் கிடைக்குமா? இயற்கையின் மறுபிறப்பு குழந்தை நிலை, இயற்கை எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியைத் தருகிறது.

இயற்கை இசை போன்றவர்களே சிறுவர்கள்! குழல் போல இசைப்பார்கள். யாழினைப்போல் இசைப்பார்கள். அவர்தம் மழலைச் சொல் சிந்தைக்கின்பம்; செவிக்கின்பம். இறைவா, என் குழந்தைக் காலம் ஓடிவிளையாடிச் சிறுவனாக வாழ்ந்த இளமைக்காலம் திரும்பக் கிடைக்குமா?

இறைவா, பருவங்கள் காரணமாகச் சிறுவர்-முதியோர் என்று கொள்ள வேண்டியதில்லை. எந்த வயதிலும் குழந்தையைப் போல வாழலாம். இறைவா, அந்தக் குறு குறுத்த பார்வை கிடைக்குமா? இன்ப மகிழ்வை அள்ளிப் பொழியும் சிரிப்பு வருமா? அது இனி கற்பனை. கள்ளமில்லாத நெஞ்சிலேயே, குளிர்ந்த பார்வை. உள் நோக்கம் இல்லாத இதயம் உள்ள இடத்திலேயே கள்ளமற்ற சிரிப்பு மலரும்.

இறைவா, நான் மீண்டும் குழந்தையாகிட அருள் செய்க! அல்லது குழந்தைத்தனமாகிய கள்ளமற்ற நிலை-கணக்கு வழக்கு அணுகாத வாழ்க்கை, கள்ளமற்ற பார்வை, அன்பினைப் பொழியும் இதயம், இறைநலம் சார்ந்த சிரிப்பு இவைகளை நீ அருளிச் செய்தால் நல்லது. நான் என்றும் குழந்தை மனத்துடன் வாழ அருள் செய்க!