பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

215



ஜூலை 17


நெஞ்சே! இறைவன் நாமத்தை என்னோடு சேர்ந்து கூறுக!

இறைவா, எம்பெருமானே, கற்பகமே போற்றி! போற்றி!! என் வாழ்நாள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்போது "வாழ்நாள் கடந்ததே-சாவு வரப்போகிறதே" என்ற கவலை எனக்கில்லை. மீண்டும் பிறப்பதற்குரிய வித்துக்களைச் சுமந்து கொண்டு சாகக்கூடாது. இதுதான் என் கவலை.

சென்ற காலத்தில் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருளும்படி வேண்டுகிறேன். இறைவா, நீ பொறுத்தருள்வாய். ஆனால், இனி நான் வருங் காலத்தில் பிழைகள் செய்யாமல் வாழ்தல் வேண்டுமே. என் நெஞ்சு என்னோடு உடன்பட்டு நிற்பதில்லை.

என் நெஞ்சினை நான் முயன்று புகழ்ந்து கூறி "நன்னெஞ்சே" என்று இரந்தும் கேட்டு விட்டேன். என் நெஞ்சு என்னோடு நிற்பதில்லை. இறைவா, மீண்டும் மீண்டும் உன் சந்நிதியில் வந்து உன்னைச் சாட்சியாக வைக்கிறேன். நெஞ்சே, நன்னெஞ்சே. சாநாளும் வாழ்நாளும் எல்லை கடந்தவையல்ல; எல்லைக்குட்பட்டவை. இந்தக் கால எல்லைக்குள் உய்யுமாறு அறிதல் வேண்டும்; உய்திக்கு உரியன செய்தல் வேண்டும்.

நன்றுடையானை எண்ணி எண்ணி நன்றாக வேண்டும். "பாவ நாசனே" என்று அழைத்திடுதல் வேண்டும். இறைவனைப் பலநூறு நாமங்கள் கூறிப் போற்றிட வேண்டும்.

நான் சொல்வதைக் கேள் என் நெஞ்சே என்னோடு ஒத்துழைத்தால் நீ உய்தி பெறலாம்; என் அருமை நெஞ்சே, உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், இறைவன் நாமத்தை என்னோடு சேர்ந்துக் கூறுக. உனக்குக் கோடி புண்ணியம்.

நான் என் மனத்தினிடம் சொல்லி விட்டேன், என்மீது குற்றமில்லை. இறைவா, என் நெஞ்சத்தைத் திருத்துக. இறைவா அருள் செய்க!