216
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஜூலை 18
|
உணர்வை எனக்கு அருள்க!
இறைவா, அறம் கண்ட அண்ணலே, போற்றி! போற்றி!! நான் மூலையில் கிடந்தேன்; அறியாமையின் இரும்புப் பிடியில் சிக்கி, நொய்ம்மை அடைந்து அழிந்து கொண்டிருந்தேன். இறைவா, நீ என்பால் இரக்கம் காட்டி ஆட்கொண்டருளி இந்த வாழ்க்கையை தந்தாய்.
என்றன் கருமேனி கழிக்கத் திருமேனி கொண்டருளிய தலைவா, நானும் உய்திபெற ஆசைப் படுகின்றேன். ஆனால் உய்திக்குரிய நெறிகளில் நாட்டம் இல்லை. ஏன்? பொய்ம்மையையாவது தொலைக்கின்றேனா. இல்லை, மனத்தில், வாக்கில், செயலில் பொய்ம்மை புரளுகிறது.
இறைவா, பொய்ம்மை எப்போது போகும்? எந்த ஒரு தீமையும் தானே போகாது, அகலாது. அந்தத் தீமை வகித்திருக்கும் இடத்தை, ஆக்கிரமித்துக் கொள்ள ஒரு நன்மை தேவை. நன்மையின் பிரவேசமே தீமையை அகற்றும்.
இறைவா, அறத்தில் எல்லாம் சிறந்த அறம் இரக்கம் காட்டுதல். இரக்கம் உயர்பண்பு நெறி. எல்லாச் சமயங்களாலும் ஏற்றுக்கொள்ளப் பெற்ற நெறி. இரக்கப்பட்டவர்களுக்குப் பரமண்டலத்து இன்பம் உறுதி என்பது அருள் வாக்கு.
இரக்கம் என்ற உயர்குணம் வந்தமைந்த வழி அனைத்து நலன்களும் வந்தமையும். அதனால் இரக்கம் அடிநிலை அறம். இறைவா, இந்த இரக்க உணர்வு எளிதில் எனக்குக் கைகூடுவதில்லை. இறைவா நின்னருள் பெறாதார்க்கு இரக்கமும் வராது போலும். இறைவா, என்பால் இரக்கம் காட்டி அருள்க.
எவ்வுயிர்க்கும் அன்பு செய்யும் நன் நெஞ்சாக என் நெஞ்சைப் பயிற்றுக. மற்ற உயிர்கள்படும் துன்பம் கண்டு துடித்து மாற்றிடும் இரக்க உள்ளத்தினை அருள் செய்க! இறைவனே இரங்கியருள்க!