பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜூலை 20


இறைவா, நான் வேண்டுவதும் நின் தேவையாக அமைய அருள் செய்க!

இறைவா, பாராக-பாரினது பயனாக உள்ள எம் தலைவா! உன்னை மனத்துள் கருத்தறிந்து முடிப்பாய் என்று எல்லாரும் போற்றுகின்றனர். வேண்டுவார் வேண்டுவதை எல்லாம் வழங்கியருளும் பேரருளாளன் என்று ஏத்திப் பரவுகின்றனர். இந்தச் செய்திகள் கேட்டு நானும் நின் சந்நிதி வந்து அடைந்தேன்.

இறைவா, என் தேவைகளை யெல்லாம் நாள்தோறும் உன்னிடத்தில் கூறி, இரந்து கேட்கின்றனன். ஆனால், ஒன்று கூடக் கைகூடவில்லை! இறைவா, என் வாழ்க்கை பொய்யாய், கனவாய், பழங்கதையாய் முடியும் நிலையில் தள்ளப் பட்டுள்ளதே.

இறைவா, நான் உனக்கு ஆகேன் என்று கொண்டு புறத்தே தள்ளத் திருவுள்ளமா? நீ என்னைத் துடைத்துத் துரத் தள்ளினும் போகேன், அருள் செய்க! இறைவா, என்ன அருளிச் செய்கின்றனை! வரிசையறிந்து அருளுதல் மரபென்கிறாய்.

தகுதியுடையோரே தகுதிகளையும், சிறப்புகளையும் பெறுவர். உள்ளவர்களுக்கு மேலும் கொடுக்கப்பெறும் என்கிறாய் ! உள்ளவர்களுக்கே மேலும் தருவது என்ன நியாயம்? என்னைக் காப்பாற்று. தகுதியுடையாருக்கே பெற்றவற்றின் அருமை தெரியும். பேணிப்பயன் காண்பர்! என்கிறாய்.

இறைவா, மெய்யடியார் வேண்டுவதையே வேண்டி அருள் செய்வாய் நின் அருள் பெற முழுதும் தகுதி, மெய்யடியாராதல்.

இறைவா, இன்றுமுதல் என் பொய்ம்மை களைந்து, மெய்ம்மை தழுவிய வாழ்க்கை நடத்த எனக்கு அருள் செய்க! நான் வேண்டுவன வெல்லாம் ஒருங்கு தந்து ஆட்கொள்க. இறைவா, நான் வேண்டுவதும் நின் தேவையாக அமைய அருள் செய்க.