பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

227





ஜூலை 29



இறைவா, என்னைச் சுற்றியுள்ள படையொடு போராட ஞானவாள் அருள்க!

இறைவா, பெருங்கருணையாளனே! இன்று உனது கருணையாட்சியைக் காட்டியருள்க! உனது கருணை காட்டும் நெறியை நானும் அடியொற்றி நடைபயிலும் பெற்றியை அருளிச் செய்க! இன்று எங்கும் "ஞான சூன்யம்"! அதனால் படுகொலைகள் நிகழ்கின்றன. கொலை பயிலுதல் வாழ்க்கையன்று.

வாளெடுத்தவன் வாளாலேயே மடிவான். இது நியதி! இறைவா, எனக்குக் கருணை பொழியும் இதயத்தினை வழங்கி அருள்க! வாழ்க்கையின் பேறாகிய ஞானமே எனக்குத் தேவை. என்னைச் சுற்றி வளைத்துத் தாக்கும் பொறிகளை, புலன்களை நான் அடக்கியாண்டு வெற்றி பெற வேண்டும்.

நன்றில் - தீதில் நடுக்கமுறும் சவலை மனத்தினை வலிமைப்படுத்திடுதல் வேண்டும். பாசத்தால் மிகுதியும் தாக்குண்டு வழுக்கி வீழும் நான் உன்னுடைய கருணையால் எழுந்து, என்றுமே வீழாமல் நடக்க வேண்டும். அருள் செய்க! ஞானத்தின் திருவுருவே! என் வாழ்வு உய்தி பெற அருள் செய்க!

தூய அறிவினனே! என் அறிவை விரிவு செய்து தூய்மை செய்திடுக! அறியாமைக் கலப்பில்லா அறிவினைத் தந்தருள் செய்க! பிறப்புறுக்கும் ஞானத்தினை வழங்கியருள்க! என்னைச் சுற்றியுள்ள படையொடு போராட எனக்கும் வாள் வேண்டும், படை வேண்டும்.

நான் விரும்பும் வாள் ஞானவாள்! ஞானமே, இம்மையில் என்னை வளர்க்கும்; வாழ்விக்கும். ஞானமே, ஞாலத்தை வெல்லும். ஞானமே நின்னைத்தரும், ஞானமே இன்ப அன்பினை வழங்கும். இறைவா அருள் செய்க!