பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 1




என் உழைப்பில் வாரா எதையும் ஏற்காதிருக்க அருள் செய்க!

இறைவா, காலமெல்லாம் உயிர்க்குலத்திற்காக உழைத்து ஐந்தொழில் நிகழ்த்திடும் அற்புதத் தெய்வமே! உண்ணும் சோறாய், பருகும் நீராய் விளங்கி வாழ்வித்திடும் அண்ணலே! நின் கருணைக்கு அடியேன் செய்யும் கைம்மாறு ஏது?

இறைவா, எல்லாம் உன் செயலே. ஆனால், அன்றும் நீ நஞ்சையே உண்டனை. பல்லூழிக்காலமாக தானாக விரும்பிக் காட்டும் சோற்றினையே பாவனையால் உண்கிறாய். உண்டது போல் பாவனை, அதையும் நீ எனக்கே திருப்பித் தந்து விடுகிறாய்.

உன் அடியவன் என்று பறை சாற்றிக் கொள்ளும் நானோ உழைப்பதற்கே சோம்பல் படுகிறேன். பிறருக்கு இல்லாத எல்லாம் எனக்குத் தேவை. கூடுதல் ஊதியம் தேவை. பிறர் உழைப்பில் வாழும் நிலை இன்று தாவரங்களுக்கு இல்லை, விலங்குகளுக்கு இல்லை. ஆனால் நான் வெட்கம் இல்லாமல் உழைக்காமல் வாழ ஆசைப்படுகிறேன். பிறர் உழைப்பில் வாழ முற்படுகிறேன். இறைவா, என்னை மன்னித்துக் கொள்.

உழைப்பே உலகத்தியற்கை என்று கற்றுத்தந்துள்ளனை. உழைப்பே உடம்பின் ஊழ். உழைத்தலே உடம்பின் இயற்கை நியதி. உழைப்பில் பயன்படுத்திடா உடம்பு நோய்க்கு இரையாகும் என்றுணர்த்திய தலைவா! “உழைத்து உண்பதே உணவு உழைக்காது உண்பது நஞ்சு உழைத்து உண்பதே நேரிய வாழ்க்கை" என்று அறநெறி உணர்த்திய ஆனேறூரும் அண்ணலே! பிறர் உழைப்பில் வாழ்தல் பிறர் பங்கைத் திருடுதல் என்ற தீய செயல்களிலிருந்து எடுத்தாண்ட அண்ணலே! நான் அயராது உழைப்பேன். என் உழைப்பில் வாரா எதையும் நான் ஏற்காதிருக்க அருள் செய்க!