திருவருட்சிந்தனை
231
இறைவா, காலனைக் காலால் தடிந்த காலகாலனே, மனிதகுலத்தை மரணபயம் வருத்துகிறது ஏன் இறைவா! நீ, மரணத்தை நிரந்தரமாகவே உயிர்களுக்கு நீக்கி அருள் செய்யக்கூடாதா? காலனுக்கு வேறு ஏதாவது பணிதரக் கூடாதா?
மரணபயத்தைக் காட்டியே இந்த உலகத்தை இயக்குதல் நின்கருணைக்கு அழகா? நீ மட்டும் சாகாமல் இருக்கிறாய்! எங்களுக்கு ஏன் சாவு? இறைவா, என்ன சொல்கிறாய்?
நானும் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாமா? அப்படியா இறைவா! நான் மரணமிலாப் பெருவாழ்வையே விரும்புகின்றேன்.
இறைவா, மரணமிலாப் பெருவாழ்வை அடையும் நெறிகளை எனக்குக் கற்றுத் தா. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரிடத்தும் ஒத்து உரிமை பாராட்டி வாழும் இயல்பினை அருளிச் செய்க.
ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்யும் பெருவாழ்வினை அருள் செய்க! இன்ப துன்பங்களில் சமநிலையில் நிற்கும் பெற்றியினை அருள் செய்க! எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் என் உடல் உணர்வுகள் சமநிலையில் அமைதி தழுவியதாக விளங்க அருள் செய்க! எந்தச் சூழ்நிலையிலும் என் உடலில் குருதி கொதிநிலை யடையா வண்ணம் அருள் செய்க! இவையனைத்தும் பயக்கும் மரணமிலாப் பெருவாழ்வை வழங்கி அருள்க!