பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 3


காணும் காட்சியினைப் பயன் கருதா உழைப்பின்
காட்சியாகக் கண்டு அங்ஙனமே வாழ அருள் செய்க!

இறைவா, சிறியோர் செய்த பிழையெல்லாம் பொறுத்தருளும் பெரியோனே! என் பிழைகள் பொறுத்து ஆள்வதற்கு ஏன் தயக்கம்? நான் எண்ணற்ற பிழைகளைச் செய்கிறேன்; திரும்பத் திரும்பச் செய்கிறேன்.

இறைவா, எனக்குப் படிப்பறிவும் துணையில்லை! பட்டறிவும் கைகொடுக்க மறுக்கிறது, நான் விழுந்து விழுந்து எழுகிறேன். இறைவா, என் செய்ய? நான் ஒரு பேதை!

இறைவா, என் அறிவைத் திருத்து. என்னை அறிவார்ந்த ஆள்வினையில் உய்த்துச் செலுத்து, என் கண்கள் காண்க. காண வேண்டுவனவற்றைக் காண்க! புலன்கள் ஒன்றிய காட்சியை அருள் செய்க! காட்சியைக் கற்றிடும் சாதனமாக ஏற்றிடும் திறனை அருள் செய்க!

"கண்டதைப் படித்தால் பண்டிதனாவான்" என்ற பழமொழி என் வாழ்வில் உண்மையாகட்டும். என்னைச் சுற்றிலும் உள்ள இயற்கையை-இயற்கையின் பொருளடைவு மிக்க செயற்பாட்டை நான் கற்றறிதல் வேண்டும்.

இயற்கையின் அழகில்-இளமையில்-பயன்பாட்டுத் திறனில் நான் கற்றுக் கொள்வனவற்றைக் கற்றுக்கொள்ள அருள் செய்க! மலர்கள் பூத்துக் குலுங்கிய செடிகள் தாயுமானாருக்கு இறைக் காட்சியைத் தந்தன.

நான் இயற்கையை வாழும் காட்சியாக, பயன் கருதா உழைப்பின் காட்சியாகக் கண்டு நாளும் அங்ங்னமே வாழ்ந்திட அருள் செய்க! ஒயாது உழைத்திடும் உழைப்பாளனாக வாழ்ந்திட அருள் செய்க! என் கண் காண்பனவற்றைக் காண்க! எனக்குக் காட்ட வேண்டுவனவற்றைக் காட்டுக. இறைவா அருள் செய்க!