பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

237





ஆகஸ்டு 8



இறைவா, நான் என்னை ஆளும் தன்மை எனக்கு அருள் செய்க!

இறைவா, தனக்குவமை இல்லாத தலைவா! ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலை உன் தலைமை.

இறைவா, எனக்கு எங்கே தலைமையின் தத்துவம் புரிகிறது. எனக்குத் தலைமைக்குரிய தகுதிகளைப் பற்றியெல்லாம் கவலையில்லை. நான் தலைவனாக வேண்டும்; அதுவே என் ஆசை!

"மயக்கமற்ற அறிவு; தெளிந்த-துணிவான அறிவு! அறிவறிந்த ஆள்வினைத்திறன், தன்னுடைய பொறிகளின் மீது மேலாண்மை, புலன்களின் மீது விருப்பம் நிறைந்த செயலூக்கம்; விருப்பு - வெறுப்புக்களைக் கடந்த நிலை, உண்மையைச் சாதிக்கும் திறன்; தீமையை எதிர்த்து உறுதியாகப் போராடும் திறன் - இவை எங்கு இருக்கிறதோ அங்குத் தலைமை தானே வந்து சேரும்.

தகுதியுடையவர்களே தலைமைக்குரியர்-இறைவா, என்ன அருளிச் செய்கின்றனை! தலைமைக்குரிய பண்புகள் சிறந்த ஆளுமை உடையவர்களிடமே அமையும். இறைவா, என்னை, நான் ஆளும் தன்மையை எனக்கு அருளிச் செய்க!

என் பொறிகளை எனக்கு நன்மை செய்யும் நெறியில் செலுத்திடும் வல்லமையை - ஆளுமையை அருள் செய்க! என்னுடைய புலன்கள் அழுக்கடையா வண்ணம் காத்துக் கொள்ளும் திறனை அருள் செய்க! என்னுடைய வாழ்நாட்காலம் முழுதையும் என்வசம் நிறுத்தி, ஆளுமையுடன் முழுமையான உழைப்புக்குரியதாக்கிப் பயன் கொள்ளும் வாழ்நிலையினை அருள் செய்க!

என்னுடைய சூழ்நிலையை நான் என்னுடைய நலனுக்கு உகந்ததாக மாற்றிடும் திறனை அருள் செய்க! இறைவா, எனக்கு இப்போது தலைமை வேண்டாம் முதலில் ஆளுமையை அருள் செய்க!