பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 9



இறைவா, என்னுடன் உறவு கொள்ள இங்கே எழுந்தருள்க!

இறைவா, ஆண்டவனே! நின்னருள் போற்றி! போற்றி!! இறைவா, நீ இன்று காணப்படும் பொருளாக இல்லை. ஆதலால் இல்லாத பொருளாகவும் ஆகிவிட்டாய். இறைவா, நீ காட்சிப்பொருளாக, சாட்சிப் பொருளாக மாறிவிட்டாய்.

நீயும் முன்போல் இயக்கத்தில் இல்லையோ? உன்னை விரும்பித் தேடிக் காண்போரும் உன்னோடு உறவு வைத்துக் கொள்வோரும் இல்லை. ஏன் இறைவா, இந்த நிலை? எனக்கும் உனக்கும் உள்ள உறவு இன்று, நேற்றுத் தோன்றியதன்றே! நமது உறவு இப்படிப் பலவீனமானதாக இருக்கலாமா? ஏன், இறைவா? நான் விரும்பி அழைக்கவில்லை என்று கூறுகிறாயா? இது அபாண்டமான குற்றச்சாட்டு!

நான் உண்மையைச் சொல்கிறேன். உனக்கு நிறைய பூசைகள் செய்திருக்கிறேன். எண்ணற்ற அருச்சனைகள் செய்திருக்கிறேன். பலநூறு ஆயிரம் உருமந்திரம் ஜபித்திருக்கிறேன். இறைவா, என்ன சிரிக்கிறாய்? இவை உனக்காகாதவை. பொருளற்ற சடங்குகள் என்கிறாயா? இவற்றில் அன்பு இல்லையா? உறவு இல்லையா? ஈடுபாடு இல்லையா? இறைவா, என்னை மன்னித்துக் கொள்.

நான் இனி உன்னோடு உரையாடத் தகுதியுடைய சபதத்தினைச் செய்வேன். உன்னோடு பேசுவேன், உன்னிடம் நெருங்கி உறவாடுவேன். இறைவா, அருள் செய்க! நான் செய்யும் சபதத்தினை ஏற்றருள் செய்க! என்னுடன் உறவு கொள்ள இங்கே எழுந்தருள்க!