பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

239





ஆகஸ்டு 10



இறைவா, மெய்யன்பு காட்டும் திறன் அருள்க!

இறைவா, மெய்ப் பொருளே! நின்னருள் போற்றி! போற்றி!! இறைவா, பொய்யை நீக்க முயற்சி செய்கின்றேன், முடியவே இல்லை. பொய்! - ஆம், இறைவா, என் வாழ்க்கையே ஒரு பொய்தானே!

அன்பு செய்வேன். இல்லை அன்பு செய்வதாகக் காட்டிக் கொள்வேன். வேலை செய்வேன். இல்லை- வேலை செய்வது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவேன். இறைவா, பொய்ம்மையில் பிறந்து உழலும் நான் பொய்யை நீக்க வேண்டும். எப் பணிக்கும் முதற்பணி பொய்யை நீக்குதல். அடுத்து அன்பு காட்ட வேண்டும். ஆம், இறைவா! மெய்யன்பு காட்ட வேண்டும்.

அன்பில் பொய்யன்பு, மெய்யன்பு என்ற வேற்றுமை உண்டு. பொய்யன்பு என்பது பயன் கருதிச் செய்யும் அன்பு. இது அன்பன்று! வணிகமாகும். ஆம், இறைவா, தூண்டிலில் புழுவைக் காட்டி மீன் பிடிப்பது போல, இறைவா, பயன் கருதிச் செய்யும் அன்பு, அன்பன்று! எண்ணிய பயன் கிடைக்காது போனால் அன்பு பகையாக மாறிவிடும்.

இறைவா, கனவிலும் நான் பொய்யன்பு செய்யக் கூடாது. நான் என் உள்ளத்தில் மெய்யன்பை வருந்தி அழைத்துக் கொள்ளவே விரும்புகின்றேன். நான் வாழ்தல் வேண்டும். அதற்கு ஒரே வழி அன்பு செய்தல், அதுவும் மெய்யன்பு காட்டுதல்.

இனி நான் மெய்யன்பு காட்டுவேன்! மெய்யன்பு காட்டும் திறனை அருள் செய்க! மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வந்து அடைந்தேன். மெய்யன்பு காட்டும் திறனை அருள் செய்க! இறைவா, அருள் செய்க!