பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 11



இறைவா, மண்ணுக்குள் வேரென மறைந்து கிடந்து சாதனை செய்திட அருள் செய்க!

இறைவா, அமரரேறே! கலந்தார் மனங்கவரும் காதலானே! இன்பத்தை விரும்புகின்றேன். ஆனால், நான் அடைவதோ துன்பம்தான். ஆம் இறைவா, மகிழ்வுக்குரிய அறிவு, செல்வம், புகழ், கூட துன்பங்கலந்த இன்பமாகவே அமைந்துள்ளன. என் வாழ்க்கையில் துன்பம் ஒரு தொடர் கதை. ஏன், இறைவா, இந்தத் துன்பத்திலிருந்து எனக்கு விடுதலை இல்லையா? உய்தி இல்லையா?

இறைவா, "துறவாத துன்பத்தைத் துற” என்கிறாய்! நான் துன்பத்தைத் துறக்க எப்பொழுதும் ஆயத்தமாக உள்ளேன். ஆசைப்படுகின்றேன். ஆனால், துன்பத்தின் காரணத்தைத் துறக்க நான் ஆயத்தப்படவில்லை. உண்மை தான். துறவாத துன்பம் எது? அதுதான் ஆணவம் !

ஆணவமே துன்பங்களுக்கு எல்லாம் முதல்! ஆணவம் பொல்லாதது; பெருமை போலக் காட்டித் தீமை செய்வது. எனக்குத் தீமை செய்யும் இந்த ஆணவம் எனக்குத் தெரியாமலே பற்றிக் கொண்டது. எளிதிலும் நீக்க இயலவில்லை. இறைவா, மன்னித்துக் கொள்!

ஆணவத்தின் வாயில்களாகிய "நான்", "எனது” கெட்டால் போதும்! "நாம்”, “நம்முடையது” என்ற கூட்டு வாழ்க்கை மேற்கொண்டால் ஆணவத்தை முற்றாகத் துறக்க இயலும், ஆணவத்தின் ஆற்றலை முற்றாக அடக்கிவிடலாம்! இறைவா, அருள் செய்க!

அடக்கத்தினை அருள் செய்க! யார் மாட்டும் தாழ்வு காட்டும் பண்பினை அருள் செய்க! மண்ணிற்குள் வேரென மறைந்து வாழ்ந்து சாதனைகள் செய்திட அருள் செய்க! துறவாத துன்பத்தையும் துறந்து வாழ அருள் செய்க!