பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

241





ஆகஸ்டு 12



எத்தனை தடவை கருவூருக்கும் சாவூருக்குமாகச் சுற்றுவது? இறைவா அருள் செய்க!

இறைவா, பிறவா யாக்கைப் பெரியோனே! நீ சாதலுக்கும் பிறத்தலுக்கும் அப்பாற்பட்டவன்! நானோ செத்துப் பிறப்பதையே தொழிலாகக் கொண்டு பிறந்து இறந்து கொண்டிருக்கின்றேன்! ஏன் இறைவா?

என்னைப் பெருநோய்கள் நலியத் துன்புறுத்தற்கு உரியவாகிய இறப்பு, பிறப்பிலிருந்து மீட்கக் கூடாதா? நின் கருணையைப் பெறுதற்கு நான் தகுதியுடையேன் இல்லையா? நீ குடியுள்ள பிறைமதியைவிட நான் என்ன தாழ்ந்தவனா? இறைவா, நின் திருவருள் நோக்கு என்பால் விழவில்லை.

இறைவா, எல்லாம் நியதிகளின்படி நடப்பது என்றா கூறுகிறாய்? நீ, எனக்குத் துணை ! ஆனால் என்னுடைய ஆக்கம் என் இதய வளர்ச்சியில் பொருந்தியிருக்கிறது. "தகுதியுடையோர் பெறுவர். வாழ்வர்” என்ற வாக்கு வாய்மைத் தன்மையுடையது.

இறைவா, நான் என்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்! நான் இங்கேயே வாழுங்காலத்திலேயே இந்த உடலுடன் உலாவரும் காலத்திலேயே "நான்” சாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆம், இறைவா! என் நெஞ்சில் நின் திருநாமம்! என் நாவில் நின் திருநாமம்! என் கால்கள் நின் திருக்கோயில் களின் திருச்சுற்றில்! கைகள் மலர்பறித்திடுதலில்! இன்ன பிற பணிகளால் "எனது இல்லாமல் போய் "நான் செத்துப் போன பிறகு, நின் திருவருள் நோக்கு, என்பால் வீழ்ந்து அவ்விருளை அகற்றி, ஞான ஒளியினை என் அகத்தில் ஏற்றும்!

நான் ஞானம் அறிந்து உணர்ந்து வாழ்ந்தால் சாதலும் இல்லை; பிறத்தலும் இல்லை! இறைவா, என்னைக் காப்பாற்று! எத்தனை தடவை கருவூருக்கும் சாவூருக்குமாகச் சுற்றுவது? இறைவா, அருள் செய்க!

கு.x.16