பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

247





ஆகஸ்டு 18



இறைவா! உழைக்கும் தவத்தினில் ஆற்றுப்படுத்தி நலத்துடன் வாழ அருள் செய்க!

இறைவா, நீ எனக்கு அருமையாக அருள் பாலித்த உடலை நலத்தோடு பேண வேண்டும். தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்லவகையில் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். உடல் நலம் பேணலும் கடமையே!

இறைவா, நல்ல காற்று சுவாசிக்க வேண்டும். நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கனிகளை உண்ண வேண்டும். இறைவா, இவையெல்லாவற்றையும் எனக்கருள் செய்க! உடம்பை இகழ்தல், நோய்க்காளாக்குதல் உனக்கு விரோதமான செயல்.

உடலைப் போற்றி வளர்த்தால்தான் உயிர் வளரும்! உயிர் வளர்ந்தால்தான் உணர்வு வளரும்! உணர்வில்தான் ஒழுக்கம் வளரும் ! ஒழுக்கத்தில்தான் உயிர் அன்பு தலைப்படும்! அப்பொழுதுதான் நீ என் உடலை இடமாகக் கொண்டு எழுந்தருள்வாய்!

இறைவா, இது என் உடம்பன்று, உனது திருக்கோயில். நான் புலர் காலையில் எழுந்தும், கதிரொளியில் தோய்ந்தும், காற்றில் களித்தும், புனலில் குளித்தும் இயற்கையோடிசைந்து வாழ்தல் தவம்! வாழ்வாங்கு வாழ்தல் அறம்!

இறைவா, நல்ல உடல், உழைப்பை நாடுகிறது, அவாவுகிறது! உழைத்தால் உடம்பு நன்றாக விளங்குகிறது. உடலுக்கு நோய் உழைக்காமையே!

இறைவா, உடல் வருந்த உழைத்தலே உடலுக்குப் பாதுகாப்பு. உடம்பு வலிமையுறுதலே பயனுறுதலுக்கு வழி. உடல் சோம்பலில் சுகம் கண்டால் இயற்கை தண்டனை தருகிறது. ஆம், நோயினைத் தருகிறது.

இறைவா, உடலின் நலனுக்கு அருள் செய்க! உடல் வருந்த உழைக்கும் தவத்தில் ஆற்றுப்படுத்தி, சுவையான, பயனுள்ள உணவுகளை வழங்குக. நல்ல உறக்கத்தினைத் தந்து நன்றாக வாழ அருள் செய்க!